ராமகிருஷ்ணன் : வணக்கம். உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
சிவகுமார் : வணக்கம். எனக்கும் மிக்க மகிழ்ச்சி
ராம : வெள்ளைச் சேலையும், வியர்வையும் விசனமும் தாங்கி வாழ்ந்த - இன்னமும் உங்கள் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் தாயாரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
சிவ : என்னுடைய தாயார் ஒரு மகத்தான பெண்மணி. கொஞ்சம் மட்டும் அவர்களுக்கு கல்வி அறிவு இருந்திருந்தால் அவர்கள் இன்னொரு இந்திரா காந்தியாக இருந்திருப்பார்கள் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். அவ்வளவு ஆற்றல்மிக்க ஒரு பெண்மணி. 32 வயதில் அவர்கள் விதவையாகிவிட்டார்கள். ஒருவேளை என் தந்தையார் உயிருடன் இருந்து என் தாயார் போயிருந்தார்களானால் நான் அனாதையாகியிருப்பேன். அந்த தாயார், தந்தையார் விட்டுச் சென்ற பிறகு அந்த பத்து மாதக் குழந்தையை, காய்ஞ்சு போன பூமியில் காலைல உதயத்திற்கு முன்போய் அஸ்தமனம்வரைக்கும் பாடுபட்டு - அது ஆணாக பகலில் பாடுபட்டு, இரவில் பெண்ணாக வந்து குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அந்த அம்மா பட்டபாடு இனிமேல் ஒரு பெண் படுவார்கள் என்று தோணல.
இன்னைக்கு இங்கு நான் என்னவாக இருக்கிறேனோ அது என் தாயார் போட்ட பிச்சை.
ராம : உங்களது தந்தையை நீங்கள் பார்த்ததில்லை. புகைப்படத்தைக்கூட பார்க்க முடியாமல் போயிற்று. அவரைப்பற்றி திரு சின்னதம்பி கவுண்டர் சொன்னதை எங்களுடன் பகிரந்து கொள்வீர்களா?
சிவ: அவர் ஒரு அபூர்வமான ஆள். இப்போது நான் 60 வயதை கடந்துவிட்ட மனிதன். இப்போ கம்பராமாயணம் படிக்கலாம்னு முடிவு பண்ணி, அது 12 ஆயிரம் பாடல்கள்னு சொல்றாங்க. கம்பராமாயணம் பாடல்கள வந்து ஒரு ஆ கு ஆதித்தன் என்பவர் கம்பன் ஆயிரம் என்னும் ஒரு பாடல் தொகுப்பு போட்டுள்ளார். அதை இன்னும் கொஞ்சம் சுருக்கி கம்பன் நூறு என்கிற வடிவத்தில் கம்பன் பாடல் வரிகளை மக்களுக்கு கொண்டு போகலாம் என்று முடிவு செய்து, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இந்த எட்டு மாதத்திற்குள் ஒரு நூறு பாடல்களை நான் மனப்பாடம் செய்திருக்கிறேன்.
இதை நீங்கள் நடிகனாக தொடர்ந்து பல வருஷம் நடிச்சிட்டிருக்கீங்க அதனால் நீங்க சுலபமாக மனப்பாடம் செய்ஞ்சுட்டீங்கன்னு நினைக்கலாம். அதை மீறி இந்த வயசுக்கப்புறம் மனப்பாடம் செய்வது என்ற ஆற்றல் என்பது, என்னுடைய தந்தை போட்ட பிச்சை என்று நினைக்கிறேன்.
அவரைப் பற்றி கேள்விப் பட்ட வரையில் அவர் தானாகவே தன்னை உருவாக்கிக் கொண்ட மனிதர். அவர் எங்கேயும் போய் படிக்கவில்லை. தானாகவே ஆங்கில போதனை புததகத்தை வைத்துக் கொண்டு ஆங்கிலம், தமிழ் உரை எல்லாம் படித்திருக்கிறார்.
விவசாயக் குடும்பத்து பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட வாத்தியராக இருந்து இரவு நேரத்தில் லாந்தர் விளக்குகளை வைத்து சம்பளம் வாங்காமல் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். குழந்தைகள் ஏதேனும் காய்கறி கொண்டு வந்து கொடுத்தால் வாங்கிப்பார்.
அப்படிப்பட்ட மனிதர், அருணகிரிநாதரின் திருப்புகழில்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக்குருபர -- எனவோதும் என்ற பாட்டு போன்று 250 பக்கத்தையும் அந்த மனிதர் மனப்பாடம் செய்து ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழனி மலைக்குச் சென்று இந்த பாடல்களை பாடி சாமி கும்பிட்டுவிட்டு வருவார்.
அதை தவிர மலையாள ஜோதிடர் மூலமாக ஜோதிடம் கற்றுக் கொண்டு அசாத்தியமான திறமையுடன் இருந்திருக்கிறார். கடைசியில் அவர் எங்கம்மாவுக்கு விட்டுச் சென்ற 15 காணி வானம் பார்த்த பூமியும் அவர் ஜோதிடத்தில் சம்பாதித்தது என்பார்கள்.
அதை மீறி அவர் இன்னொன்று செய்வார். உதாரணமாக பாண்டிபஜார் காவல் நிலைய்திற்கு அருகே ஒரு வாகனம் வருகிறதே அது என்ன ஏற்றி வருகிறது என்று கேட்டால், தோராயமாக அரிசி மூட்டை வருகிறது என்று கூறுவோம்
ஆனால் அவர் துல்லியமாகச் சொல்வார், ஆட்டுத்தோல் வருகிறது என்று. ஆனால் பக்கத்தில் வந்து நிற்கும்போது பார்த்தால், அது மாட்டுத்தோலாக இருக்கும். அதேமாதிரி இங்கிருந்து ஒரு பத்து மைல்களுக்கு அப்பால் ஒருவர் வந்து கொண்டிருக்கிறார் என்றால், நீங்கள் ஒன்று சொல்வீர்கள், அவர் சொல்வது சரியா இருக்கும். இதற்குக் காரணம், நிமித்தமா அல்லது என்ன என்று தெரியவில்லை.
யோகத்துல மூக்கின் வலது பக்கம் காற்று அதிகமாக இருந்தால் சூரியகலை என்று பெயர். இடது பக்கம் காற்று அதிகமாக இருந்தால் சந்திரகலை என்று பெயர்.
சூரியகலை அதிகமாக இருக்கும்போது ஆளுமை அதிகமாக இருக்கும். அதாவது நாம் சொல்வது சரியாக இருக்கும் என்பது போன்ற கணக்கு வைத்துக் கொள்வார்.
இப்படிப்பட்ட வித்தைகளையெல்லாம் வைத்துக்கொண்டு அந்த மனிதர் தான் அல்ப்ப ஆயுசில் போகப்போவதை எற்கனவே தெரிந்து வைத்துக் கெணாடு, பிற்காலத்தில் தனது புகைப்படத்தை பார்த்து அழுவார்கள் என்பதால் புகைப்படம் எடுத்துக்கொள்ள விடாமல் சென்று விட்டார். அப்படிப்பட்ட அபாரமான மனிதர் அவர்.
|