| |
|
இந்த வார பிரபலம் : புகழ்பெற்ற நடிகர், சிவகுமார்
|
ராம: கொடைக்கானல் மேகத்திற்கும், சினிமாப் புகழிற்கும் வேறுபாடே இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். இன்றும் இதுதான் உங்கள் கருத்தா?
சிவ : சாகும்வரை அதே கருத்துத்தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஏன் என்றால், தியாகராஜ பாகவதர்ன்னு கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு மனிதன், தங்கத் தட்டில், தங்க டம்ளரில் வேறு யாரும் சாப்பிட்டதாக தெரியவில்லை. சிவாஜி கணேசன், எம் ஜி ஆர் கூட இப்படி செய்திருப்பார்களா தெரியல. காரைக்குடி பக்கம் தியாகராஜபாகவதர் வரும்போது சட்டத்தை மீறி ரயிலை நிறுத்தி வெள்ளைக்காரர் காலத்தில் அவரை ஏற்றி வந்திருக்கிறார்கள்.
இரண்டாவது உலகப்போரின்போது யுத்த நிதி வேண்டும் என்று வெள்ளைக்காரன் கேட்டபோது, கச்சேரி போட்டு நாடகம் போட்டு வசூல் பண்ணிக் கொடுத்தால். யுத்தம் முடிந்தவுடன் உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். என்ன கொடுப்பீர்கள் என்று இவர் கேட்டார்.
இதோ இந்த பகுதியை, 250 ஏக்கரை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். நான் பிறந்த நாட்டை கூறுபோட்டு எனக்கே நீ பிச்சை வழங்குகிறாயா, எனக்கு என் நாடு முழுவதும் வேண்டும். என்னுடைய சொந்த இடத்தை எனக்கு நீ கூறுபோட்டு குடுக்காதே நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றார். அந்த இடம்தான் இப்போது திருச்சி பக்கத்தில் ஒரு பெரிய ஊராக திருவரும்பூராக இருக்கிறது. அப்படி பேர் புகழ் வாங்கின பாகவதர், மைலாப்பூரில் பிருந்தாவன் தெருவில் அவர் குடியிருக்கும்போது, சென்ட்ரல் ஸ்டூடியோ வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு போகும்போது, சாலை ஓரத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு ஐம்பது நூறு இட்லி வாங்கி நியூட்டன் ஸ்டூடியோ வாயிலில் விடியவிடிய காத்துக் கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் விநியோகம் செய்துவிட்டுத்தான் உள்ளே போவார்.
அப்படி வாழ்ந்த மனிதன். அவர் இறந்துபோனபோது அவரது உடலை உடனே எடுப்பதற்கு பொது மருத்துவமனையில் 110 ரூபாய் கொடுப்பதற்கு யாரும் முன் வரவில்லை. அந்த விநாடிக்கு யாரும் வரவில்லை. இதுதான் புகழ். இது யாருக்கும் பொருந்தும். எப்போதும் பொருந்தும்.
ராம : ஏண்டா நடிக்க வந்தோம்னு நீங்க எப்பவாவது நினைத்ததுண்டா?
சிவ : அது தப்பில்லையா? பெரும் பாவம் அல்லவா? நான் ஓவியரா வாழ்ந்த காலம் சொர்க்க லோகம் மாதிரி. இன்னொரு பிறவியில் பிரான்ஸ் மாதிரி ஒரு நாட்டில் நான் வரைய வரையவே மக்கள் வந்து அதை விலைக்கு வாங்கிட்டு போற மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஆனால் நடிகர் என்பது சாதாரண விஷயமா? ராமாயணம் படிக்கிறோம். மகாபாரதம் படிக்கிறோம். எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக படித்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் ராம பிரானின் வடிவம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அர்ஜுனனுக்கு வடிவம் தெரியுமா? சீதைக்கு வடிவம் தெரியுமா? ஆனால் ஒரு மாயா பஜார் படத்துல பார்த்தால் கடோ த்கஜன் யார்னு, அபிமன்யூ யார்னு தெரியுது. இந்த பக்கம் சம்பூர்ண ராமாயணம் பார்த்தால், என்டி ராமராவ்தான் ராமன் வேடம் போட்டார். பத்மினி சீதையாக நடித்தார். என்று ஒரு உருவம் கிடைக்கிறது. கடவுளுக்கே வடிவம் கொடுத்தவன்தானே நடிகன். சிவன் யாரு என்றால் திருவிளையாடலில் சிவாஜி, முருகன் யார் என்றார் சிவகுமார். கடவுளுக்கு வடிவம் கொடுத்தது நடிகன் அல்லவா..?! அந்த பாக்கியம் கிடைக்குமா..? நாளைக்கு நான் போய்விடலாம். ஆனால் சாகாவரம் பெற்றவை அல்லவா.. நடித்த படங்கள். இந்தப் பிறவியில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா..? ஒருபோதும் நான் வருத்தப்படமாட்டேன்.
ராம : நடிகராக வர விரும்புவோருக்கு என்ன தகுதி இருக்கவேண்டும்?
சிவ : நடிகரா வர்றவருக்கு அடிப்படையில ஒழுக்கம் வேணும். கடுமையான உழைப்பு வேணும். தோல்விகண்டு துவண்டுபோவாத ஒரு மன வலிமை வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நீ தகுதியானவனா என்று முடிவு செய்யும் தகுதி உனக்கு வேண்டும்.
ராம : ஒரு துணை நடிகராக திரைப்பட வாழ்க்கையைத் துவக்கிய நீங்கள், இனி நானும் ஒரு ஹீரோ என்று கூறிக்கொள்ள உங்களுக்கு உதவிய நடிகர் யார்?
சிவ : அந்த நடிகர் சிவகுமார்தான். அவர் நிறைய டைம் எடுத்துக்கிட்டாரு. கார்த்திக் மாதிரி முதல் படத்திலேயே ஹீரோவா பண்ணல. சூர்யா மாதிரி முதல் படத்திலயே டபுள் ஹீரோ ரோல் பண்ண முடியவில்லை. அவர் அதாவது நான், முதல் படத்தில் நாலு சீன் நடிச்சாரு. அதுல ஒரு சீன் வரும் என்று நினைத்தேன் அதையும் வெட்டி எடுத்து விட்டார்கள். ஏன்என்றால் உடன் நடித்த பெண்மணி என்னைவிட முதிர்ந்தவராக தோன்றியதால் சீனையே வெட்டிவிட்டார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக என்னுடை சீனை வெட்டி விட்டார்கள். இந்த மாதிரி ஆரம்பித்து அப்படியே படிப்படியாக வரும்போது நானாக என்னை வளர்த்துக் கொண்டேன். அதாவது 38 படங்கள் எட்டு ஆண்டுகள், தமிழகத்தில் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளுடன் நடித்து, இந்தியா பூராபோய் நாடகங்கள் நடிச்சி நானாக என்னை தயார் பண்ணிக்கிட்டேன். ஆக நான் ஹீரோவாக வருவதற்குக் காரணமானவன் சிவகுமாரேதான்.
ராம : படித்து பட்டம் பெறும் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், இன்ஜீனியர்கள், பேராசிரியர்கள், ஐ ஏ எஸ் அதிகாரிகள் உயர்ந்தவர்களா? நடிகர்கள் உயர்ந்தவர்களா?
சிவ : உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை நான் எப்படி சொல்ல முடியும்? என்னுடைய ஓவியங்கள் சிறந்தவையா என்பதை அவற்றை பார்த்து நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். கல்வியாளர்களைப் பொறுத்தவரையில் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பற்றி இரண்டு அபிப்பிராயங்களுக்கு இடமில்லை.
உண்மையிலேயே கல்வியாளர்கள் நேர்மையாகவும், ஒழுக்கத்துடனும் இருந்தால் அவர்கள் வணங்கத்தக்கவர்கள். அதே நேரம் நடிகர்கள், கலைஞர்களை நாம் ஏன் அவ்வளவு மலிவாக நினைக்கவேண்டும். அதாவது ஒரு சின்ன விஷயம். புரிஞ்சிக்குங்க. ஒரு ஐம்பது கால ஆண்டு எடுத்துக் கொண்டீர்களேயானால் எத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகிறார்கள்? எத்தனை ஐபிஎஸ் அதிகாரிகள், எத்தனை பேராசிரியர்கள், துணைவேந்தர்கள்
எந்தத் துறையில் பார்த்தாலும் ஐம்பது ஆண்டுகளில் எத்தனையோ பேர் வருகிறார்கள். ஆனால் ஐம்பது ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் பார்த்தீகளேயானால், அந்தக் காலத்தில் ஒரு தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, பிறகு எம்ஜிஆர், சிவாஜி, பிறகு அந்த அளவுக்கு வலிமையாக பார்த்தால் ஒரு கமல், ரஜினி அப்புறம் இப்போது பசங்க வர்றாங்க. நாங்களெல்லாம் இடையிலுள்ள காலக் கட்டம்.
ஆக ஐம்பது ஆண்டு காலத்தில் ஒரு இருபது நடிகர்கள்கூட வருவதில்லை. ஆறு கோடி பேரில் ஐம்பது ஆண்டுகளில் ஒரு பத்துபேர்தான் நிற்க முடிகிறது என்றால், அது எவ்வளவு கடினமான துறை. எதிர் எதிர் வீட்டில் இருப்போரே சண்டைபோடாமல் இருக்க முடியவில்லை என்கிறபோது, எங்கோ ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு தாய் தந்தையருக்கு பிறந்த ஒருத்தனை ஆறு கோடி மக்கள் எனக்கு பிடித்த நடிகன் என்று ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால்... அது சாதாரண விஷயமல்ல.
நடிகனையும் நீங்கள் தயவு செய்து மதியுங்கள் என்று சொல்கிறேன். அவன் மிகப்பெரிய ஆள் என்று நான் சொல்லமாட்டேன். கல்வியாளர்கள், ஒழுக்க சீலர்கள், சான்றோர்கள் அவர்களுக்கு மரியாதை கொடுங்க. அதற்காக நடிகனை நீங்க அலட்சியப்படுத்தாதீங்க.
(உங்கள் மகன்கள் நடிப்புத் துறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா..?, உங்கள் முதல் திரைப்பட அனுபவம்..?, பூவும்-புயலும் படத்தில் மட்டும் மீசை இல்லாமல் நடித்தீர்களே.?, மறுபக்கத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கை நழுவிப்போன போது உங்கள் மன உணர்வு..?, உயர்ந்த மனிதன், என் அண்ணன் அனுபவம்..., கமல்-ரஜினி பற்றிய கணிப்பு, உங்களை மிகவும் அழவைத்தச் சம்பவம்...? கம்பராமயணத்தில் உங்களை கவர்ந்த ஓரிரண்டு இடங்கள்..... இப்படி பல கேள்விகளுக்கு சிவகுமார் சுவைபட பதிலளிக்கிறார். அடுத்த பகுதியை பார்க்கத் தவறாதீர்கள்)
To Be Continued...
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
|
|
 |
|
Shopping Chennaionline
|
|
|
|
|
|