ராமகிருஷ்ணன்: உங்கள் மகன்கள் நடிப்புத் துறைக்கு வருவார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா.........?!
சிவகுமார்: நான் இளமையில் பார்த்த சினிமாக்கள் மிகக் குறைவு. முதன்முதலில் ஏழு வயதில்தான் சினிமா பார்த்தேன். நான் பார்த்த முதல் படம் சந்திரலேகா. அதன்பின் எஸ்எஸ்எல்சி வரையில் அம்மா என்னை, பையன் கெட்டுப்போய்விடுவான் என்று கூறி தீபாவளி, பொங்கல் நாட்களில் மட்டும் அதுவும் மேட்னி ஷோவுக்கு மட்டும் அனுப்புவார்கள். ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடவேண்டும்.
எஸ்எஸ்எல்சி வரைக்கும் நான் பார்த்தது 14 படங்கள். சினிமா என்பது என்னைப் பொறுத்தவரையில் எட்டாத கனவு. சினிமாவுக்கு போனால் கண்டிப்பாக வீணாப்போவார்கள் என்பது எங்கள் காலத்திய கருத்து ஒன்று இருந்தது. சினிமாவில சான்ஸ் வாங்குவதும் கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் நீடித்து நிற்பது கஷ்டம் என்று நினைத்தார்கள். நான் ஏழு ஆண்டுகள்ல ஓவியனா வாழ்ந்த கால கட்டங்கள்ல நான் வாழ்ந்த முறையைப் பார்த்துவிட்டு இவன் சினிமாவுக்கு போனாலும், இவன் ஒழுங்காக இருப்பான் என்று நினைத்து யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அப்படி வந்துட்டேன. ஆனால் இந்தத் துறையை பற்றி எனக்குத் தெரியும். இது பாதுகாப்பான துறை இல்லை. ஒழுக்கக் குறைவாக வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம். இந்தத் துறையில் அதிக அளவில் பணம் வரும். புகழ் வரும். ஆனால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது அப்படீங்கறதால எங்க வீட்ல நானும் சரி, என் துணைவியாரும் சரி, குழந்தைங்க நல்ல படிச்சி அவர்கள் பெரிய ஆளாக வரவேண்டும், அதனால் படிக்க வைப்போம்; ஒழுக்கசீலனாக வளர்த்துருவோம் அதற்கப்புறம் அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்களோ அதை அவர்களே முடிவு செய்யட்டும் என்று விட்டுவிட்டோ ம்.
ஆனால் நாங்கள் தமாசாக நினைத்துக் கொண்டிருந்தது, கார்த்தி என்கிற சின்ன பையன்தான் துருதுருவென்ற இருப்பான். பாட்டெல்லாம் நல்லா பாடுவான். டான்ஸ் ஆடுவான் அவன்தான் ஆக்டராக வருவான்னு நினைச்சோம். பெரியவரு எப்பவுமே கொஞ்சம் அமைதியா இருப்பாரு. ரொம்ப காம். ஆனா என்ன வேடிக்கைன்னா அது வெடிக்காத அணுகுண்டா இருந்து அது சூப்பரா வெடிக்க ஆரம்பிச்சிடுச்சி. அப்புறம் அவரைப் பார்த்து இவரு வெடிக்க ஆரம்பிச்சிட்டாரு.
ராம:உங்கள் முதல் திரைப்பட அனுபவம் எப்படி இருந்தது..?
சிவ: ரொம்ப சிரமமான அனுபவம். அதாவது, என்னுடைய மாமா மகன்தான் எனக்கு முதன்முதலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது ஒரு இரண்டாயிரம் அடி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, ஏவிஎம் படத்தில் உங்களுக்கு ஒரு வேஷம் இருக்கிறதுன்னு சொன்னாங்க.. அதுக்கு மேக்கப் டெஸ்ட் வச்சாங்க. மூணுவரி டயலாக் சொல்லச் சொன்னாங்க. 'ராதா உன் முகத்தை நீ கண்ணாடியில பார்த்ததில்லையா? நீ அழகானவன் என்று உன் அண்ணனும், அம்மாவும் உன்னிடம் ஒரு தடவைகூட சொன்னதில்லையா' இது டயலாக்.
மேற்கொண்டு என்றேன். இதுபோதும் இதை ஒழுங்ககாகச் சொல்லு என்றார்கள். காலைல ஒன்பது மணிக்கு காலை உணவு கொடுப்பாங்க. மத்தியானம் வரைக்கு டயலாக்கை ஒரு இருபதுவாட்டி சொல்லச் சொல்வாங்க. அப்புறம் மத்தியானம் சாப்பாடு சாப்பிடச் சொல்வாங்க. அப்புறம் டைரக்டர் வெத்தல சீவல் போடுவார்... இப்படி கண்டினியூ பண்ணச் சொல்வாங்க. இரண்டாவது நாள் டயலாக்க சொல்லுன்னாங்க. சொன்னேன். தலையை சரியாக வைத்துக் கொள் என்றார்கள். வைத்துக் கொண்டேன். "ராதா... என்று டயலாக்கை சொன்னேன். ஏன் பொணம் மாதிரி சொல்ற? பீலிங்கோட சொல்லு என்றார்கள். நாபிக் கமலத்திலிருந்து டயலாக் வரவேண்டும் என்று கூறினார்கள். இப்படி மூன்று நாள் ரிகர்சல் பண்ணிட்டு, டேக் என்று சொல்லி மறுபடியும் ரிகர்சல் பண்ணிட்டு, லைட்டெல்லாம் போட்டாங்க. என்மேலதான் லைட். டைரக்டர் எல்லாம் காணாமல் போய்ட்டாங்க. க்ளாப் அடிச்சாங்க. ஆக்ஷன்னாங்க. ராதாவுக்கு அப்புறம் சுத்தமாக மறந்துபோச்சு. ராதா.. உன் முகத்தை நீ கண்ணாடியில பார்த்ததில்லையான்னு சொல்லணுமா..? அல்லது ராதா நீ உன் முகத்தை கண்ணாடியில பார்த்ததில்லையான்னு சொல்லணுமா என்று திகைத்தேன். அவ்வளவு ரிகர்சல் பார்த்திருக்காங்க. செம கன்பியூஷன்ல ந
னஎல்லாம் மறந்துபோய் நான் அழுதுவிட்டேன். பிறகு டைரக்டர் திருலோக் சந்தரிடம் சொன்னேன். ஸாரி எனக்கு டயலாக் மட்டும் வரமாட்டேங்குது மன்னிச்சுக்கங்க. நான் நாடகத்தில் பேசின டயலாக்கிலும் ராதா என்றுதான் பெயர் வரும். நான் கண் டாக்டராக இருப்பேன். ஒரு கதாநாயகி பிறவியில் பார்வை இல்லாத அந்த பெண்ணுக்கு கண் பார்வை கொடுத்துட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா போயிருப்பேன். வர்றதுக்குள்ள கமலஹாசன் மாதிரி அழகான பையன்கூட அந்த பொண்ணு ஓடிப் போயிடும். அதுக்கப்புறம் இப்படி ஏமாத்திட்டு போய்ட்டியேமா அப்படி பீல் பண்ணி பேசும்போது....... பத்து பதினைந்து பக்க டயலாக். அது இன்னும் நினைவில் இருக்கு. அதைவிட பெரிய விஷயம் என்னதுன்னா அந்த படத்துல நாலு சீன். எப்படிப்பட்ட சீனுன்னா, நீங்க ஒரு தியேட்டருக்கு போய் சீட் நம்பர பார்த்து துடைச்சிட்டு ஒக்காரதுக்குள்ள சீன் போய்டும். அப்படிப்பட்ட புட்டேஜ் எழுபது அடி எழுபது அடி நீளம் சீன். ஒரே ஒரு சீன் மட்டும் கொஞ்சம் பெரிய சீன். ஒரு ஊனமுற்றப் பொண்ணு.... அந்த பொண்ணை ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்புகிறேன் என்றால்...... என் அம்மாவும் அதேமாதிரி பிறவியிலயே ஊனமுள்ளவங்க. அதனால என் வாழ்க்கையில் ஊனம் உள்ள பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும் அப்படீன்னு முடிவு பண்ணிணேனே தவிர, பரிதாபத்தில் இல்ல என்று சொல்வது போன்ற சீன்.
இது பெரிய சீன். அதை பீச்சில்போய் மனப்பாடம் பண்ணி, விடியற்காலை நாலு மணிக்கு அலையோடு சத்தம்போட்டு பேசி, மனப்பாடம் எல்லாம் பண்ணிட்டு வந்து இங்க வந்து நடிச்சி முடிச்சா........... நாளைக்கு ரிலீஸ் இன்னைக்கு நைட்டு சீனை தூக்கிட்டாங்க. அந்த சீன் வரவேண்டிய இடத்துல பார்த்தேன்...... இங்க வர்றலீயே..! ஓ. எஸ் எஸ் ஆர் வீட்டுக்கு போனவுடனே... ஏம்பா என் தங்கச்சிய லவ் பண்றேன்னு கேப்பாரு? கேட்டவுடனே.. அங்க ப்ளாஷ்பேக் வரும் அப்படின்னு நினைச்சேன். அங்கயும் வரல. அதற்கு பதிலா வணக்கம் வந்து விட்டது. அதாவது படம் முடிந்துவிட்டது. சுபம்.
இப்படியெல்லாம் துன்பப்பட்டு முதல் படத்தில் நடிச்சி முடிச்சேன்.
ராம:புராணப் படங்களைத் தவிர மற்றபடி மீசையில்லாமல் நீங்கள் நடித்ததில்லை? பூவும்-புயலும் படத்தில் மீசை ஏன் இல்லை?
சிவ:ஆமாம். அதுல ஒரு புரொபஸர் கேரக்டர் வந்திச்சி. அந்த காலத்துல புரொபஸர்கள் மீசை வைத்துக் கொள்ள மாட்டார்கள். புரொபஸர்ன்னும்போது ஒரு லுக்வேணும். அதனால மீசை இல்லாம நடிக்கச் சொன்னாங்க.
ராம: "மறுபக்க"த்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கை நழுவிப் போனபோது உங்கள் மன உணர்வு எப்படி இருந்தது.
சிவ: அதாவதுங்க பொதுவாகவே நான் வந்து கடமையைச் செய். பலனை எதிர்பாராதே என்பதில் நம்பிக்கை உள்ளவன். பலனை எதிர்பாராதே என்றால் பலன் வேண்டாம்னு அர்த்தம் இல்ல. நம்ம கடமையை சரிவர செய்யவேண்டும். மத்தபடி விளைவுகளை பற்றி சிந்திக்கக்கூடாது. அதமாதிரி மனோபாவம் தான் நான் கொள்கையா வைத்திருக்கிறேன். அதாவது உறவாடும் நெஞ்சம்னு ஒரு படம் நடிச்சேன். அந்த படத்துல உயிரைவிட்டு நடிச்சோம். நடிச்சு படம் பிரமாதமாக ஓடும் என்று நினைத்து நண்பரை மேட்னி ஷோக்கு அனுப்பினோம். அவனும் போயிட்டு வந்தான். க்ளைமாக்ஸ் பிளாட்டுல ஜனங்களுக்கு நம்பிக்கை இல்ல. படம் சரியில்லன்னுட்டான். வீட்டுல அம்மாகிட்டகூட சொல்லாம, நேரா பீச்சுக்கு போனேன். உயிரைவிட்டு படம் நடிச்சோமே. பீவர்லகூட நடிச்சோமே என்று எண்ணி, அப்படியே உட்கார்ந்தேன். ஒரு பெரிய இரும்பு குண்டெடுத்து வாயிக்குள்ள போட்டு முழுங்கி அந்த குண்டு கீழயும் போகாம மேலயும் வராம...நடுவில மாட்டி ...மூச்சு திணறுது...... அந்த மாதிரி ஒரு மணிநேரம் ரெண்டு மணிநேரம் உட்கார்ந்து அழுதுட்டு.... வாழ்க்கை எத்தனை படம்தான் பண்ணப்போறாம். .இந்த மாதிரி ஒவ்வொரு படத்திற்கும் இந்த மாதிரி நாம துன்பப்பட்டோ ம்னா நம்ம வாழ்க்கை என்ன ஆகும்? என்று நினைத்து நடித்து முடித்து பூசணிக்காய் உடைத்தவுடன் கிருஷ்ணார்ப்பணம் என்று கடவுள் மீது பாரத்தை போட்டுவிடவேண்டும் என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஆனால் இப்படியெல்லாம் இருந்த நான்......... இந்திரா பார்த்தசாரதியின் கதை மறுபக்கம் படம்.... கிட்டத்தட்ட அந்த படத்திற்கு அவார்டு கிடைக்கும் என்கிற மாதிரி சூழல் வந்தது. கடைசில ஏழரை மணி செய்தி என்றால், மணி ஏழு 25 வரை சிறந்த படம், சிறந்த நடிகர் அந்த வரிசையில் இந்த படம் இருந்தது. 7.25-க்கு விதிவசமாக அமிதாபச்சனுக்கு அந்த விருது போய்விட்டது. அதுக்கு ஒன்றும் சொல்ல முடியாது.
ஆக, வாழ்க்கையில் நான்.. ஒரே ஒரு படத்திற்கு அவார்டு எதிர்பார்த்தது மறு பக்கத்திற்குத்தான். அதுவும் கை மாறிப்போச்சு. அதுக்கப்புறம் அவார்டை பற்றி நான் எதிர்பார்ப்பதும் இல்லை. ஆசைப்படுவதுமில்லை.
|