ராமகிருஷ்ணன்: 1972-ஆம் ஆண்டு பெங்களுருக்கு நீங்கள் விமானத்தில் செல்லும்போது ஜெமினி கணேசன் உங்கள் கைரேகை பார்த்து உங்களுக்கு வழங்கிய அறிவுரை...
சிவகுமார் : ஒரு மனிதன் உயர்கிறான் என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஒருவன் பெரிய ஆளா வந்துவிட்டானே என்று நாம் பொறாமை படக்கூடாது. அப்படியிருக்கிறான் என்றால் அவனிடம் ஏதோ ஒரு தகுதி இருக்கிறது. சிவாஜி, எம்ஜிஆருக்கு கிடைத்த புகழ் முனைந்து கிடைத்த புகழ். அதாவது உழைத்து போராடி பெற்ற புகழ். ஜெமினியைப் பொறுத்தவரையில் போராடி பெற்ற புகழ் என்று சொல்ல முடியாது.
சிவாஜி, எம்ஜிஆரை பயன்படுத்த முடியாதவங்க... சிவாஜி-எம்ஜிஆர் மேல் யார் யாருக்கு கோபம் இருந்ததோ அவர்கள் எல்லோரும் ஜெமினியை பயன்படுத்தினார்கள். கே எஸ் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், ஏ பி நாகராஜன், கே பாலசந்தர் இப்படி பல்வேறு இயக்குநர்கள்.... ஜெமினியைப் பயன்படுத்தினார்கள். அவர் ஒரு அற்புதமான மனிதர்.
அதுல என்ன வேடிக்கைனா... ரெண்டு பேரும் விமானத்துல போனபோது என் கைய பார்த்துட்டு, அவர் என்னை மாப்பிளை மாப்பிளை என்றுதான் அழைப்பாரு. டேய் மாப்பிளை இந்த பொம்பள சமாச்சாரத்துல மட்டும் நீ மாட்டிக்காதடா அப்படீன்னாரு. "நீ மட்டும் பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் மாதிரி கோபியர்கள் சூழ டூயட் பாடிட்டு இருப்ப, நான் மட்டும் சும்மா இருக்கணும் போயா" என்றேன்.
"இந்த பூமியில எனக்கு தெரியாத விஷயமே கிடையாதுடா. பகவான் எனக்கு இந்த மாதிரி ஒரு இயல்பை வச்சிட்டான். ஏண்டா தம்பி தயவு செய்து கோச்சிக்காதடா. தப்பு பண்ணாதடா அப்படீன்னு சொன்னார். அதைவிட எல்லாம் பெரிய விஷயம் என்னன்னா.... அவரு வந்து சில்வர் ஜுப்ளி ஹீரோ. 25 வருஷம் நடிச்சி முடிச்சவரு. அப்பவே லட்சக்கணக்குல சம்பளம் வாங்கிட்டு இருந்தாரு. அப்படிப்பட்ட மனுஷன், பீ ஆர் பந்துலு-வின் கங்கா-கெளரி படத்துல நான் மகாவிஷ்ணு வேஷத்துல, அவரு சிவன் வேஷத்துல நடிச்சிட்டிருந்தப்பா...! இவர் தினமும் அசைவம் சாப்பிடுவாரு. அவருடைய ரசிகர் ஒருவர் பெரிய கேரியர்ல அசைவம் கொண்டு வந்து கொடுத்துட்டு சாப்பிட சொன்னப்போ.. மாப்பிள்ளை வாடா சாப்பிடலாம்னு சொன்னபோது,.... நான் ஏ பி நாகராஜனிடம் சத்தியம் பண்ணியிருக்கேன். புராண படம் பண்ணும்போது அந்தப் படம் முடியற வரைக்கும் நான் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று கூறினேன்.
பைத்தியகார பயலா இருக்கியேடா என்று கூறிவிட்டு அவர் சாப்பிட்டார். ஷுட்டிங் முடிஞ்சு ஊருக்கு போறபோது சாப்பிடுவியான்னு கேட்டார். சரின்னேன்.
சுஜாதா ஹோட்டல் பிளேட்டு கேட்டா உடனே பிளேட்ட வரல. அட உக்காருடான்னு சொல்லி என்னை உக்கார வச்சிட்டு... சொன்னா நம்பமாட்டீங்க........ அந்த லிவர் பீஸை..... அப்போ நான் அசைவம் சாப்பிட்டிட்டிருந்தேன். இப்போ நிறுத்தி 22 வருஷம் ஆறது....... அந்த லிவர் பீஸை எடுத்து கடிச்சி பார்த்துட்டு, ராமாயணத்துல சபரின்னு சொல்லுவாங்களே அதைப்போல, டேய் இந்த லிவர் சூப்பரா இருக்குன்னு சொல்லி அதே பீஸை எனக்கு ஊட்டிவிட்டார்.
அவர் கதாநாயகன், படிச்ச நடிகன், நான் ஒரு சாதாரண வளர்ந்து வரும் ஒரு நடிகன். சொந்த புள்ள மாதிரி அதை கடிச்சிப் பார்த்துட்டு எனக்கு ஊட்டிவிட்டார். அந்த மனிதர் 85 வருஷம் வாழ்ந்தார் என்றால் அவரைப் பற்றி என்ன என்னமோ பல விதமாக சொல்லுவாங்க நிறைய காதல் உண்டு. காதல் மன்னன். அட இருந்துட்டு போட்டும் சார். ஆனா வந்து யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு மனிதன். அந்த குணம்தான் அவரை வாழ வைச்சது.
ராம: ஸ்ரீதர் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் இயக்குநர் ஸ்ரீதரிடம் இரண்டு டயலாக் ஒப்பித்தீர்களே... அமரதீபம், புனர்ஜென்மம் என்று நினைக்கிறேன். அதை கொஞ்சம் சொல்லுங்களேன்.
சிவ: நாடகக் கம்பெனிகளிலிருந்து வருகிற நடிகர்கள் அல்லாமல், யாரும் நடிகராக வரலாம், கல்லூரியில் படிக்கும் பையன் உட்பட யாரும் நடிகராகலாம் அப்படீன்கற மாதிரி ஒரு தன்னம்பிக்கை கொடுத்து, நடிகராக கொண்டுவந்தவர் முதன் முதலில் ஸ்ரீதர்தான்.
அவர் வந்து ஸ்ரீதரின் வெண்ணிறாடை, ஸ்ரீதரின் கல்யாண பரிசு, ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் என்று டெக்னீசியன் பெயரை போட்டு, முதன்முதலில் பேர் வாங்கின முதல் மனிதன் ஸ்ரீதர்தான். ரொம்ப ஜோவியலா இருப்பாரு. ஒரு கல்லூரி புரபொசர், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஒரு பிக்னிக் போறமாதிரி படம் எடுத்து வந்தாரு. திடீர்னு அவர் உடம்பு சரியில்லாம அப்பல்லோ மருத்துவமனையில இருக்காருன்னு தகவல் வந்ததை அடுத்து விழுந்தடிச்சி அங்க போய் பார்த்த அவர் ஒரு கோமா நிலையை நோக்கி போய்கிட்டு இருக்காருன்னு சொன்னாங்க.
அப்ப டாக்டர் சொன்னாரு. அவருக்கு மெமரி போய்கிட்டு இருக்கு. பழைய விஷயங்கள் ஏதாவது ஞாபகப்படுத்தினா அவருக்கு பயனுள்ளதா இருக்குமே-ன்னு சொன்னாரு. உடனே நான் ஒரு உலுக்கு உலுக்கினேன். "சார் நான் ஒரு விஷயம் சொல்றேன். அதை கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்" என்றேன். என்னை ஒரு விதமாக பார்த்தார்.
"எந்த இடத்திற்கு வந்தால் என் வேதனை தீரும் என்று எண்ணி வந்தேனோ! அந்த இடத்தில வேதனை அதிகமாகி விட்டதே. என் உள்ளத்திலே பற்றி எரியும் நெருப்பை நீயாவது அணைப்பாய், என எதிர்பார்த்தேன், ரூபா. எரியும் நெருப்பிலே எண்ணை வார்த்து ஜுவாலைவிட்டு எரியச் செய்துவிட்டாய். நசான் யாரென்று எனக்கு தெரியவில்லையே! என் இறந்த காலமே என் நினைவில் இல்லையே! என் சிந்தனை சுவற்றில் மோதி மோதி என் சித்தம் கலங்கிவிட்டதே! நான் பசியால், பட்டினியால் களைத்து துடித்தபோதுகூட இப்படி துடிதுடித்தது இல்லையே எனக்கு ஏன் இந்த வேதனை? எனக்கு ஏன் இந்த கஷ்டம்? இது எந்த படம்? என்ன படம் சொல்லுங்க? நான் உலுக்கினேன். அப்படியே லேசா பொறி தெரிச்சு யோசனை பண்ணினாரு. டேய் டேய் இது என் படம்டா.. என் படம்டா.
இது எந்த படம்?
இது அமரதீபம்.
யார் பேசின டயலாக்?
சிவாஜி கணேசன்.
கூட யாரு இருந்தாங்க?
பத்மினி இருந்தாங்க.
அப்படியே திரும்பிப் பார்த்தா ஸ்ரீதரின் மனைவி தேவசேனா கண்ணுல தாரை தாரையாக கண்ணீர். டாக்டர் சொன்னாரு. ஒண்டர்புல். ஒண்டர்புல் என்று.
நான் சொன்னேன். இன்னொரு டயலாக் சொல்றேன் சொல்லுங்க பார்ப்போம். "ம்மா கடவுள் ஓரவஞ்சனைக் காரரம்மா" "என்னப்பா சொல்ற" "எனக்கு மட்டும் நல்ல அம்மாவை கொடுத்த அந்த கடவுள்..... உனக்கு மட்டும் ஏன் மோசமான மகனை கொடுத்தார்". அப்படின்னவுடனே.....
டேய் இது என் டயலாக்தாண்டா.
எந்த படம்?
புனர்ஜென்மம்.
யாரு வசனம் பேசினாங்க?
சிவாஜி.
அம்மா யாரு?
கண்ணாம்பான்னாரு.
கடைசியா ஒரு சான்ஸ். நீங்களே ஊர்ல இருக்கறவங்களுக்கு எல்லாம் வசனம் எழுதிக் கொடுப்பீங்க. சிவாஜி, முத்துராமன். கோபாலகிருஷ்ணன் எல்லோருக்கும் கொடுப்பீங்க. ஆனா நீங்களே டயலாக் எழுதி, நீங்களே பேச முடியாட மாட்டுன டயலாக எப்போ?
இது வந்து... இந்தியா-பாகிஸ்தான் சண்டை நடந்நதப்போ யுத்த பிரச்சார படம் எடுக்கச் சொன்னாங்க. நான் சிவாஜிக்கு முத்துராமனுக்கு எல்லாம் எழுதிக் கொடுத்தேன். ஆனா கேமரா முன்னால நான் எழுதின நாலு வரி வசனத்தை என்னால ஒழுங்கா பேச முடியல. ஆறு டேக் ஆயிடுச்சி. நான் நடிக்கறப்போ ஸ்டார்ட், கட் சொன்ன ஆள் யாரு தெரியுமா? எஸ் எஸ் ஆர்.-தான்.
வேடிக்கை என்னன்னா... அமர தீபம் படத்துல விபத்து நடந்து, விபத்தின்மூலமா வந்து நினைவு இழந்துவிட்ட ஒருத்தனுடைய உணர்வுகளை சொல்றதுக்காக எந்த டயலாக்கை ஸ்ரீதர் எழுதினாரோ..... அந்த டயலாக் அவருடைய வாழ்வில் அவர் நினைவுகளை இழந்து கொண்டிருந்தவேளையில், நான் சொல்லிக் காட்டி நினைவுகளை வரவழைத்தேன் என்பதுதான் ஒரு வேடிக்கையான சம்பவம்.
Part I  Part II  Part III
|