1997 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான பரபரப்பான
காலகட்டத்தில் வாஷிங்டன்னில் நமது தூதரகத்தில் துணை
தூதராகப் பணியாற்றியவர் டி. பி. ஸ்ரீனிவாஸன். 1998 மே
மாதம் போக்ரான் அணுசோதனை நடந்த பிறகு, நமக்கும்
அமெரிக்காவுக்குமான உறவுகள், 1971-ஆம் ஆண்டுக்குப்பிறகு,
மிக மோசமான நலையை எட்டியது. நமது தூதரகம் - குறிப்பாக
ஸ்ரீனிவாஸன் -மேற்கொண்ட முயற்சியாலும், அமேரிக்காவில்
வாழும் நம் நாட்டவரின் ஆதரவினாலும், அதோடு, கார்கிலில்
பாகிஸ்தான் செய்த ஹிமாலயத்தவறினாலும், ஈராண்டுகளில்
உறவு சீரடைந்தது. 2000-ஆவது ஆண்டு மார்ச் மாதம் அதிபர்
க்ளிண்டன் நமது நாட்டுக்கு வருகை தந்தபோது
மறக்கமுடியாத அளவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதும்
நினைவிருக்கலாம்.
'வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள்:
ராஜதந்திரத்தின் சாகசங்கள்' எனும் தலைப்பில்
ஸ்ரீனிவாஸன் தமது நினைவலைகளை நூலாக
வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
முன்கோபத்தினால், வெள்ளை மாளிகை பாரதத்துக்கு சிக்கல்
விளைவிப்பதில் தயக்கம் காட்டவில்லை. 'ஒரு டன்
செங்கற்களைப் போடுவதைப்போல நாம் அவர்களை நடத்துவோம்',
என்று , அணுசோதனை நடந்த செய்தி வாஷிங்டனை அடைந்து 24
மணி நேரத்தில், ஒரு அதிகாரிகள் கூட்டத்தில் அதிபர்
க்ளிண்டன் சொன்னார். அணுசோதனைக்கான் காரணங்களை விளக்கி
வாஜ்பேயி அனுப்பியிருந்த கடிதத்தை நாங்கள் அதிபர்
க்ளிண்டனுக்கு அனுப்பிவைத்தோம். 1962-ஆம் ஆண்டு நம்
மீது ஆக்கிரமிப்பு செய்த வெளிப்படையாகவே அணு ஆயுத
நாடாக உள்ள நமது அண்டைநாடான சீனாவையும், மறைமுக
அணுஆயுதநாடாக உள்ள பாகிஸ்தானையும் அவர் காரணங்களாகக்
குறிப்பிட்டிருந்தார். ஒரு ரஹஸ்யக் கடிதமானபோதிலும்
வாஜ்பேயின் கடிதம் அடுத்த நாள் நியூயார்க் டைம்ஸ்
நாளிதழில் வெளியாயிற்று. உயர்மட்டத்தில் யாரேனும்தான்
கடிதத்தைப் பத்திரிகைக்குக் கொடுத்திருக்கவேண்டும்.
உறவுகளைப் பொறுத்தவரையில், அடுத்த நான்கு வாரங்கள்
மிகக்கடினமானவை. உறவுகள் ஸ்தம்பித்தன. நமது நாட்டுக்கு
எதிராக விதிக்கப்பட்ட தடைகள் விஷயத்தில் முன்பின்
பழக்கமில்லாத அமெரிக்க அதிகாரிகள், தடைவிதிகளை
மிகக்கடுமையாக செயல்படுத்தத் துவங்கினார்கள். உலகிலேயே
மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கிடையேயான உறவுகளின்
அஸ்திவாரம் ஆட்டம் காணும் அளவுக்கு, ஆர்வக்கோளாறினால்
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். ஆராய்ச்சி
மையங்களிலிருந்து நம் நாட்டு விஞானிகள் பணிநீக்கம்
செய்யப்பட்டது பற்றிய செய்திகள் வந்தவண்ணமிருந்தன.
எங்களை எதிர்நோக்கிய அசாதாரண நிலைமையைச் சமாளிக்க
தூதரகம் தயாரானது. நமது அணுக் கொள்கையை விளக்குவதற்கான
தீவிர திட்டமொன்றைத் தயாறிக்குமாறு தூதர் நரேஷ் சந்த்ரா
என்னைக் கேட்டுக்கொண்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை,
அமெரிக்க நாடாளுமன்றம், பத்திரிகை-தொலைக் காட்சிகள்,
அமெரிக்காவில் உள்ள நம் நாட்டவர் ஆகிய அனைவருடனும்
தொடர்பு கொள்வதென்றும், குறைந்த அளவுக்காவது ஆயுதம் நம்
கையிலிருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச்சொல்லி
அவர்களைப் புரியவைக்கவேண்டும் என்றும் முடிவு
செய்யப்பட்டது.....நரேஷ் சந்திரா பத்திரிகை-தொலைக்
காட்சி ஊடகங்களைக் கையாண்ட விதம் அற்புதம். ஒவ்வொரு
தொலைக்கட்சி சேனலிலும் தோன்றி, பொறுமையாகவும்,
மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்வகையிலும், வெளிப்படையாகவும்
கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவரது சொல்லாற்றலும்
விஷயஞானமும் அனைவரையும் கவர்ந்தது. அவர் சொன்ன பல
விஷயங்கள், உலகெங்கிலும் உள்ள நமது தூதர்களுக்கு
குறிப்புக்களாக அமைந்தன.
செனட் உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் -
ஏன், ஃப்ராங்க் பல்லோன் மற்றும் பெஞ்சமின் கில்மன்
ஆகியோரைத்தவிர இஇபாரதக் குழு உறுப்பினர்களும்கூட -
ஓரிரவில் பகைவர்கள் ஆகிவிட்டார்கள். செனட் வெளியுறவுக்
குழுத் தலைவர் ஹெம்ஸ் நமது அரசின்மீது விஷம் கக்க
ஆரம்பித்து விட்டார்.
நாம் எப்படி உறுதியாக, அலசி ஆராய்ந்து - ஆனால் அதேநேரம்
குற்ற உணர்வின்றி - பதில் அளிப்பது என்பதில் நரேஷ்
சந்த்ரா தெளிவாகவிருந்தார். நாங்கள்
அவரைப்பின்பற்றினோம்.....அணு சோதனையையடுத்து எட்டு
வாரங்களில் தூதரகம் மேற்கொண்ட செயலினால் நமது கொள்கை
பற்றி அவர்களது உணர்வு மறியது என்றே சொல்லலாம்.
உறவுகள் சில்லிட்டுப்போயிருந்தவேளையில் ஒரே ஆறுதல்
அமெரிக்கவில் உள்ள நம் நாட்டவர் தான்......நமது அரசுடன்
பேச்சு நடத்துவதென்று அமெரிக்க அரசு முடிவெடுத்ததற்கு
அங்குள்ள நம்மவர் செலுத்திய அழுத்தம் என்றால்
மிகையாகாது.
டால்பட் - ஜஸ்வந்த் சிங் பேச்சுக்கள் பற்றிய முழுவிவரம்,
அது பற்றிய ஆவணங்கள் வெளியிடப் பட்டால்தான் தெரியவரும்.
ஆனால், உறவுகளை ஓரளவு சரிசெய்ய இஇஇபேச்சுக்கள் உதவின
என்பது உண்மை.
லாகூர் வரைச்சென்று பகிஸ்தானுடனான உறவுகளைச் சரிசெய்ய
வாஜ்பேயி முயன்ற சூடு ஆறுவதற்குள் பாகிஸ்தான் கார்கில்
ஆக்கிரமிப்பு செய்தது நமது அரசுக்கு ஒரு
பேரதிர்ச்சியாகவே அமைந்தது. நம்மை அந்த நாடு
ஏமற்றிவிட்டதாகவும் அவமதித்துவிட்டதாகவும் நமது அரசு
ஏண்ணியதில் தவறில்லை.......
கார்கில் பற்றி அமெரிக்காவின் நிலையில் ஏற்பட்ட
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்துக்கு அதிபர்
க்ளிண்டனே காரணம் என்று கூறப்பட்டாலும், பகிஸ்தான் அளவை
மீறிவிட்டதாக அமெரிக்க வெளி உறவுத்துறை
புரிந்துகொண்டதும் ஒரு முக்கிய காரணம்......
ஸ்ரீநிவாஸனின் நூலில் பல புதிய தகவல்களும் உள்ளன.
உறவுகள் அதலபாதாளத்துக்கு வீழ்ந்ததையும் அதே போல
மளமளவென்று உச்சிக்குச் சென்றதையும் அவர் சுவைபட
எழுதியுள்ளார். அமெரிக்கவுடனான நமது உறவுகள் பற்றி
ஆராய்வோருக்கும், தூதரக அலுவலர்களுக்கும், பன்னாட்டு
உறவுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கும், பொது மக்களுக்கும்
பயனுள்ள நூல் என்றால் மிகையாகாது.