|
(1) செந்தில் நாதன்
chenthil@gmail.com கேள்வி: அன்புள்ள
சாம்பன், அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் வலுப்பெற்று
வருவதுபற்றி உங்கள் கருத்து என்ன? இந்தியப்
பொருளாதாரத்தில் இதன் விளைவு என்னவாக இருக்கும்?
டாலரில் சம்பாதிப்பது இனிமேல் புத்திசாலித்தனமா?
பதில்: உலகப் பொருளாதாரமயம் என்பதில் பல
நன்மைகளும் பல தீமைகளும் உண்டு. அதில் இதுவும் ஒன்று.
இதைப்பற்றி நாம் அளவுக்கு அதிகமாகக் கவலை கொள்ளத் தேவை
இல்லை என்பதே என் கருத்து.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு பின்னடைவு
ஏற்பட்டிருப்பது நிதர்சனம். ஆனால், பின்னடைவிலிருந்து
மீண்டு, மறுபடியும் வலுவான பொருளாதாரமாக மாறும் ஆற்றல்
அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு உண்டு. ஏனென்றால் அதன்
அடித்தளம் அப்படிப்பட்டது.இதனால் இந்தியப்
பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு எதுவம் ஏற்பட்டுவிடாது.
ஓராண்டுக்குமுன் டாலரில் ஏற்றுமதி ஒப்பந்தம்
செய்துகொண்டவர்களின் லாபம் குறையலாம். இதுவும் ஒரு
தாற்காலிகப் பாதிப்புத் தான். இனிமேல் ஒப்பந்தம்
செய்யும்போது, டாலரின் மதிப்பில் ஏற்படகூடிய
மாற்றதுக்கும் வகைசெய்துவிட்டால் போயிற்று.
மேநாட்டுப் பாணியில், ஒரேயடியாகக் கடன்களை
அள்ளிக்கொடுக்கும் நமது வங்கிகளின் போக்குத் தான்
கவலையளிப்பதாக இருக்கிறது. கடனில் வாங்கியே நாட்களைக்
கழிப்பது நமது பொருளாதாரத்திற்கு உகந்ததாக இருக்கும்
என்று நான் நினைக்கவில்லை.(நீளமான பதிலுக்கு
வருந்துகிறேன்).
(2) தாசன்
guru_kripa@yahoo.com
கேள்வி: நாம் இன்றைய உலகில்
தென்னிந்தியர்களுக்கான ஒரு தனித்தன்மையை நிலைநாட்டப்
போராடிக்கொண்டிருக்கும்போது, சென்னை, மேநாட்டு
நாகரீகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பது பற்றி உங்கள்
கருத்து என்ன?
பதில்: நமது பண்பாடு, பின்பற்றுவதற்குச்
சற்றே சிரமமானது. பெரியவர்களைக் கண்டால் வணங்கவேண்டும்,
அவர்கள்முன் உட்காரக்கூடாது, வெளியே சென்றால்,
நாகரீகமாக நடந்துகொள்ளவேண்டும், வீட்டுக்கு வெளியே
முடிந்தவரையில் உணவருந்த வேண்டாம், சாலையில்
போகும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் எதையும்
சாப்பிடாதீர்கள், சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும்
கைகழுவ வேண்டும்....இப்படி நமது பெற்றோர்கள் நமக்குக்
கற்றுத்தந்த பழக்கவழக்கங்கள் பின்பற்றுவதற்குச் சற்று
சிரமமே. ஆனால், எதையும் எங்குவேண்டுமானாலும் செய்யலாம்
என்ற கலாசாரம், பின்பற்ற மிக எளிது.
தண்ணீர் எப்படி உயர்ந்த இடத்திலிருந்து தாழ்வான
இடத்திற்குப் பாய்கிறதோ, அப்படியே தான் பண்பாடும். We
are moving towards an easier living. இதற்குச் சென்னை
மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா?
(3) தினேஷ் (சென்னை)
கேள்வி: சட்டி சுட்டதடா என்றால் என்ன?
பதில்: சேதுசமுத்திரதிட்ட விவகாரத்தில்,
ராமர் என்று ஒருவர் இருந்தாரா என்று சந்தேகம் எழுப்பி,
உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்து,
மாட்டிக்கொண்டு, அதைத் திரும்பப் பெற்று, மறுபடியும்
பதில் மனு தாக்கல் செய்யத் திணறியபோது, ராமர்
இருக்கவில்லை என்று சொன்னால் வடமாநிலங்களில் வாக்குகளை
இழக்க நேரிடும் என்று அம்பிகா சோனியும், ராமர்
இருக்கவில்லை என்றே கூறவேண்டும் என்று டி ஆர் பாலுவும்
வலியுறுத்தியபோது, இரண்டுமே வேண்டாம் - அந்த
விவகாரத்தையும் உச்சநீதிமன்றத்திடமே விட்டுவிடலாம்
என்று கபில் சிபல் கூறினாரே, அது தான் சட்டி சுட்டதடா
கைவிட்டதடா என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
(4) சுப்பிரமணியம் (சென்னை)
கேள்வி: ஒரே செயல் ஒருங்கே நல்லதையும்
கெட்டதையும் செய்யமுடியுமா?
பதில்: ஏன் முடியாது? மாநிலங்களவைத்
தேர்தலில், காங்கிரசுக்கு இரு இடங்கள் என்று கலைஞர்
அறிவித்தது, கட்சிக்கு நல்லது. ஆனால். ஒரு இடத்தில் ஜி
கே வாசன் என்று உறுதியானபிறகு, இன்னொரு இடத்துக்காக
பலர் மல்லுக்கு நிற்கும்போது அதை யாருக்குக் கொடுப்பது
என்பது, கட்சிக்குக் கெட்டதே.
குறிப்பு: உங்களுடைய கேள்வியும் இந்த
பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |