நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என்பார்கள். மத்திய அரசின் நிலைமை கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்து வருகிறது. நாலரை ஆண்டுகளாக பயமுறுத்தும் கம்யூனிஸ்டுகளின் எச்சரிக்கைகளுக்கு இடையே மத்திய அரசு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்கிறோம் என்று அந்த நாட்டுக்கு வாக்கு கொடுத்துவிட்டார் மன்மோகன்சிங். இப்படி உறுதி கூறிய பிறகு பல நாட்கள், வாரங்கள், மாதங்கள். வருடங்கள் உருண்டோ டிவிட்டன.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் அவர் திண்டாடுகிறார். இந்தியா அரசியல் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வெளிநாட்டுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை. நிலைமை இப்படியிருக்க அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்ற முடியாமல் வலிமை வாய்ந்த ஒரு அரசு தவிக்கவேண்டும்?
கூட்டணி ஆட்சி என்றால் தொல்லைதான். நாலரை ஆண்டுகள் இந்த அரசு ஆட்சியில் இருந்து வருவதற்கு காரணம் இடதுசாரிகள்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக மத்திய அரசிடம் ஏதேனும் குறை கண்டு அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தனது வலிமையை இடதுசாரிகள் நிலைநாட்டி வருகிறார்கள்.
கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் காங்கிரஸுக்கு எதிராக அரசியல் நடத்தி பழக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்களால் காங்கிரஸ் கொள்கைகளை எதிர்க்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால் ஒன்று அடிப்பதாக பாசாங்கு காட்டுவார்களேயொழிய அடிக்க மாட்டார்கள்.
அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் நாட்டுக்கு நல்லது., நாட்டின் வருங்காலத்திற்கு நல்லது என்று மத்திய அரசு எவ்வளவோ சொல்லிவிட்டது. மன்மோகன்சிங் செய்த ஒரு பெரிய தவறு என்னவென்றால், அமெரிக்காவுக்கு வாக்குறுதி கொடுத்த அடுத்த கணமே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியைத் துவக்கி இருக்கவேண்டும், யாருடைய ஒப்புதலையும் எதிர்பார்க்காமல்.
இவர் ஏன் இடதுசாரிகளின் ஒப்புதலை நாடினார். அவர் செய்த இரண்டாவது தவறு பாரதிய ஜனதாக் கட்சியின் ஒப்புதலை முதலிலேயே வாங்கியிருக்கவேண்டும். அவர்களும் தந்திருப்பார்கள். அவர்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே அவர்கள்தான்.
அவர்கள் ஒருவேளை ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத்தான் போகிறார்கள். இடதுசாரி கட்சிகளுடனான ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பதிலாக பா.ஜ.க உட்பட அனைத்துக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்புக் குழுவை மன்மோகன்சிங் அமைத்திருந்தால் இந்நேரம் அவருக்கும் அவருடைய அரசுக்கும் அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கும் தர்ம சங்கடம் நேராமல் இருந்திருக்கும்.
ஹெச் ராமகிருஷ்ணன்