படப்பிடிப்பில் விக்னேஷைப் பாம்பு கடித்ததுதான் பெரும் சோகம். ஈசா என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அவர். ராஜபாளையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டுச் சென்னை திரும்பத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
 இந்நிலையில் ஒரு சண்டைக் காட்சியின்போது அவர் மீது பாம்புகளைத் தூக்கி எறிவதுபோல் காட்சி. இதற்காகப் பல் பிடுங்கிய பாம்புகளே பயன்படுத்தப்பட்டதாம். சினிமாவுக்கு வழக்கமாக பாம்புகள் கொடுக்கும் ஊழியர்களைத் தவிர, அந்தப் பகுதி பாம்பாட்டிகளிடமும் கொஞ்சம் பாம்பு கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எடுத்து வந்த பாம்புகளுக்கும் பல் பிடுங்கப்பட்டிருக்கிறதா என்று சோதித்த பிறகே படப்பிடிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.
துரதிருஷ்டம், இந்தக் கூட்டத்தில் ஏதோ ஒரு எட்டப்பனும் கலந்து விட்டதுதான். மேலே விழுந்த பாம்புகள் தன் பொக்கை வாயால் விக்னேஷைக் கடிக்க, அலட்சியமாக அவற்றைத் தள்ளிவிட்டு சண்டை போட்டாராம் விக்னேஷ். சிறிது நேரத்தில் அவர் மயக்கமாகிவிட, பிறகுதான் தெரிந்ததாம், நிஜப் பாம்புகளும் இதில் கலந்துவிட்டன என்று. அரக்கப் பறக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ், தற்போது நலம்.
|