குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவர் கண்களையும் உறுத்திய விஷயம், படத்தின் 50 சதவீதம் என்று ரஜினியால் வர்ணிக்கப்பட்ட பசுபதி நிகழ்ச்சிக்கு வராமல் போனதுதான். இந்த நிகழ்ச்சிக்கு வந்தமர்ந்த சிறிது நேரத்தில் தன்னைச் சுற்றிலும் அமர்ந்திருப்பவர்களை நோட்டம் விட்ட ரஜினி, பசுபதியைக் காணாமல் திகைத்தார். பின்பு இயக்குனர் பி. வாசுவிடம் கொஞ்சம் சத்தமாகவே "பசுபதி வரலையா?" என்றார்.
 அடுத்த வினாடி ரஜினியின் அருகில் போய் அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார் பி. வாசு. சமாதானம் ஆன ரஜினி, தனது உரையில் கூடப் பசுபதியையோ, மீனாவையோ குறிப்பிடவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
உண்மை என்ன? இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விளம்பரங்களிலும், அழைப்பிதழிலும் பசுபதியின் படம் சிறிய அளவில்கூட இடம் பெறவில்லை. இதனால் மிகவும் அப்செட் ஆகியிருக்கிறார் அவர். இவர் நடித்து வரும் 4777 என்ற படம் இந்தியில் வெற்றிகரமாக ஓடிய படம். அதில் நானா படேகர் நடித்த கேரக்டரில்தான் பசுபதி நடிக்கிறார். நானா படேகர் நடித்த அதே கேரக்டரில் நீங்கள் நடிப்பதை பற்றி சொல்லுங்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவர் நடித்த கேரக்டரில் நான் நடிக்கிறேன். இது பற்றிச் சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது என்றார் பசுபதி அசால்ட்டாக. மரியாதைக்குக்கூட, அவர் நடித்த கேரக்டரில் நானும் நடிப்பது பெருமையாக இருக்கிறது என்று சொல்ல விரும்பாதவர் அவர். அப்படியிருக்க, ரஜினி கலந்து கொள்கிற விழாவாக இருந்தால் என்ன? இருக்கட்டுமே என்று வீட்டிலேயே இருந்திருப்பார் போலிருக்கிறது. ஆனால், அவர் வெடிகுண்டு முருகேசன் படப்பிடிப்பில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
|