|
டிசம்பர்
ஜனவரியில் சென்னைதான் சொர்க்க பூமி. உலகின் வேறு எந்த
நகரத்திலும் இல்லாத கலை நிகழ்ச்சிகள் ஓய்வு
ஒழிச்சலின்றி சென்னையில் நடைபெற்று வருகின்றன.
பெயருக்குத்தான் டிசம்பர். நவம்பர் மாதத்திலேயே
சங்கீத சீசன் துவங்கிவிடுகிறது. எல்லோரும் சங்கடமான
சமையலைவிட்டு, சங்கீதம் பாடவும், கேட்கவும்
வந்துவிடுகிறார்கள். நூற்றுக்கணக்காகன சபைகள்,
ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகள், இசையோடு இணைந்து
நடனமும்-நாடகமும் உண்டு. இதோடு, கிறிஸ்துமஸ், ஆங்கிலப்
புத்தாண்டு நிகழ்ச்சிகளும் சேர்ந்து கொள்கின்றன.
அதையடுத்து சென்னை சங்கமம். சென்ற ஆண்டில் சென்னை
சங்கமம் துவங்கியது. சென்ற ஆண்டு இதற்கான செலவு சுமார்
இரண்டரை கோடி ரூபாய். இந்த ஆண்டு அதைவிட அதிகமாகத்தான்
ஆகும். "திருவிழா நம்ம தெருவிழா" என்று
பெயரிட்டிருக்கிறார்கள். நமது நாட்டுப்புற கலைகள்,
பண்டைய கலைகள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டும்
நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் கலைஞர்கள்
கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆண்டு புதிதாக தமிழ் உணவுத் திருவிழாவும்
நடைபெறுகிறது. கும்பகோணம், மதுரை, விருதுநகர்,
செட்டிநாடு, தஞ்சாவூர், முதலியார், கொங்குநாடு மற்றும்
பிராமணர்கள் கைவண்ணம் ஆறு நாட்கள் பல்வேறு உணவு வகைகளை
ருசி பார்க்க வகை செய்கிறது. இதில் இன்னொரு அம்சம்
என்னவென்றால் உணவுத் திருவிழா சென்னையின் 11
பூங்காக்களில் நடைபெறுகிறது.
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் அகில இந்தியா
சுற்றுலா வர்த்தக கண்காட்சி அரங்கிலும் இந்த
நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சென்னை
சங்கமத்திற்கு
அதிக அளவில் வெளி மாநில, வெளிநாட்டுச்
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு முயற்சி நடைபெற்று
வருகிறது. கலை நிகழ்ச்சிகள் நாளை (ஜனவரி-11) முதல்,
ஆறு நாட்கள் நடைபெறும். 17-ஆம் தேதி அனைத்து
கலைஞர்களும் ஒன்றிணைந்து ஒரு எழில்மிகு
பேரணியை சென்னை பெசன்ட்
நகரில் நடத்தவிருக்கிறார்கள்.
இதற்கிடையே, பொங்கல், மாட்டுப் பொங்கல்,
காணும்பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகியவையும்
சேர்ந்து கொள்வதால் சென்னை மக்களைப் பொறுத்தவரையில்,
அலைகளும் ஓய்வதில்லை., கலைகளும் ஓய்வதில்லை.
|