நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் ஆனந்தம் ஆரம்பம் படத் துவக்க விழாவை வெகு விமரிசையாக நடத்தினார்கள். பிரமிட் சாய்மீரா தயாரிக்கும் இப்படத்தை விஷ்ணுசங்கரன் இயக்குகிறார். பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அதர்வாவை வாழ்த்த வந்திருந்தார்கள்.
ஒவ்வொரு விவிஐபி களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்லிக்கொண்டேயிருந்தார் அப்பா முரளி. ஆனாலும் ஒரு கட்டத்தில் சோர்ந்துபோன அதர்வா, அப்பாவின் பேச்சைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அப்படியே நிற்க, இதைக் கவனித்துக்கொண்டிருந்த ராதாரவி தனது பேச்சில் இதைக் குறிப்பிட்டார்.
நீயே உயரம். அடிக்கடி குனிந்து குனிந்து காலில் விழுவது ரொம்ப சிரமம். அதனால் எல்லாருக்கும் குனிய வேண்டாம் என்றார். ஆச்சர்யம் என்னவென்றால், எல்லார் காலிலும் விழுந்த அதர்வா ராதாரவியிடம் ஆசிர்வாதம் வாங்க மறந்ததுதான். சம்பளத்தை ஒரேயடியாக ஏத்திடாதப்பா. கொஞ்சம் கொஞ்சமா ஏத்து என்ற ராதாரவி, இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.
முரளியை நான் அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், நான் தயாரித்த பூவிலங்கு படம்தான் முதலில் வந்தது. அதில் ஆத்தாடி பாவாட காத்தாட என்ற பாடல் பிரபலம்! அந்த பாடலின் முதல் எழுத்தும் ஆ. இந்த படத்தின் முதல் எழுத்தும் ஆ. அப்பாவைப் போலப் பிள்ளை பல படங்களில் நடித்துப் பெயர் வாங்கணும் என்றார். கூடவே, அப்பாவிடம் இருக்கிற நல்ல விஷயங்களை மட்டும் கத்துக்கோ. சில விஷயங்கள் வேண்டாம் என்று ராதாரவி சொல்ல, முரளி முகத்தில் லேசான வெட்கம்!