சில பாத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். அவற்றில் ஒன்று நீலாம்பரி. படையப்பாவில் ரஜினிக்கே சவால் விட்டுக் கலக்கிய பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் ஜொலித்ததை யாராலும் மறக்க முடியாது. பல ஆண்டுகள் கழித்து அதே அளவுக்கு வலுவான பத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும்படம்தான் ஆறுமுகம்.
பரத் - ப்ரியாமணியை வைத்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எடுத்துவரும் படம் ஆறுமுகம். புடிச்சிருக்கு படத்தைத் தயாரித்த கூல் புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் ரம்யா அசத்தலான வேடத்தில் நடிக்கிறார். இட்லிக்கடை நடத்தும் பரத்துக்கும் கோடீஸ்வரி ரம்யாவுக்கும் நடக்கும் போராட்டம்தான் கதையின் மையம். ஒரு திருப்புமுனைக்காகக் காத்திருந்த ரம்யா இந்தப் பாத்திரத்தைப் பற்றிக் கேட்டதும் ஒப்புக் கொண்டுவிட்டாராம்.
ஆறுமுகத்தில் இன்னொரு நீலாம்பரியா என்றால் அதுதான் இல்லை. இது முழுக்க முழுக்க நெகடிவ்வான கேரக்டர்னு சொல்ல முடியாது. கொள்கைப் பிடிப்புள்ள கேரக்டர். இன்னும் கேட்டா படத்துல வில்லத்தன்மே இல்லைன்னுதான் டைரக்டர் சொன்னார் என்கிறார் ரம்யா கிருஷ்ணன். படையப்பாவில் நீலாம்பரி என்றால் இதில் மாலினி.
பரத்திற்கு ஜோடியாக ப்ரியாமணியும் தங்கையாக சரண்யா மோகனும் நடிக்கிறார்கள். பரத்தும் ப்ரியாமணியும் கல்யாணம் ஆகாமலேயே குடித்தனம் நடத்தும் புதுமையான சம்பவமும் படத்தில் உண்டு.
அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களில் சுரேஷுடன் இணைந்து மாபெரும் ஹிட் பாடல்களைக் கொடுத்த தேவா இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைகிறார்.
சித செண்பககுமார் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்குத் திரைக்கு வரும் என்று தெரிகிறது.