
தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (சுபாஷினி டிரெம்மல்), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி - ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல், ஜெர்மனியில் வசிக்கிறார். Hewlett Packard நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். இந்த அமைப்பின் பல்வகைப் பணிகள் குறித்து இந்த உரையாடல் அமைந்தது. அந்த இ-நேர்காணல் வருமாறு:
தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 1
தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 2
===============================================
அண்ணா: மண்ணின் குரல் என்ற ஒலி (ஆடியோ) வலைப்பதிவு; நிகழ்கலை என்ற ஒளி (வீடியோ) வலைப்பதிவு; என்ன சேதி என்ற செய்தி வலைப்பதிவு; Image Heritage என்ற நிழற்பட வலைப்பதிவு ஆகியவற்றைக் குறித்து விளக்குங்கள்.
சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வெளியிடப்படும் பதிப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படியாகக் கொண்டவை. இதனைத் தவிர்த்து, பல்வேறு தனித் தனி விஷயங்கள் பார்வைக்கு வரும் பொழுது, அவையும் தமிழர் மரபு சார்ந்தனவாக இருக்கும் போது அதனையும் பதிப்பித்து வைக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் அவற்றையும் தொகுக்க ஆரம்பித்தோம். அதனை வலைப்பக்கத்தில் தனித் தனி பக்கத்தில் வைப்பதை விட வலைப்பூக்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைப் பதிப்பிக்க விரும்பினோம். அதன் அடிப்ப்டையில் தோன்றியவை தான் இந்த நான்கு வலைப்பூக்களும்.
* மண்ணின் குரல் என்ற ஒலி (ஆடியோ) வலைப்பதிவு;
* நிகழ்கலை என்ற ஒளி (வீடியோ) வலைப்பதிவு;
* என்ன சேதி என்ற செய்தி வலைப் பதிவு;
* Image Heritage என்ற நிழற்பட வலைப்பதிவு
இந்த நான்குமே அதன் பெயரில் குறிப்பிட்டுள்ளது போல ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, தகவல் மற்றும் நிழல்கலை ஆகியனவற்றைப் பதிப்பிக்கப் பயன்படுத்தப்படும் வலைப்பூக்களாக உள்ளன.
அண்ணா: சொந்தத் தளம் வைத்திருக்கும் நீங்கள், மரபுசார் ஆக்கங்களைச் சேமிக்க, இலவசமாகக் கிடைக்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தியது ஏன்?
சுபா: தமிழ்மணம் வலைப்பதிவர் குழுமத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் பற்றிய அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்ற காரணத்தால் இதனை ஆரம்பித்த போது எங்கள் சொந்தத் தளத்திலே இல்லாமல் blogger.com வழி எங்கள் பதிவுகளைப் பதிப்பிக்க ஆரம்பித்தோம். தற்போது wordpress மென்பொருளை எங்கள் சர்வரில் இணைத்திருக்கின்றோம். இந்த நான்கு வலைப்பூக்களையும் படிப்படியாக இந்த மென்பொருள் வலைப்பூ பகுதிக்கு மாற்றும் செயல்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த மாற்றத்திற்குப் பின்னர் 4 வலைப்பூக்களும் எங்கள் சொந்தத் தளத்திலிருந்தே வெளியிடப்படும்.
இந்த நான்கு வலைப்பூக்களில் 'மண்ணின் குரல்' சற்று மாறுபட்ட ஒன்று. ஏனைய மூன்று வலைப்பூக்களிலும் அவ்வப்போது தகவல்கள் கிடைக்கும் போது மட்டுமே செய்திகள் பதிப்பிக்கப்படுகின்றன. ஆனால் 'மண்ணின் குரல்' வலைப்பூவில் தொடர்ந்து மாதா மாதம் புதிய வெளியீடுகளை வழங்கி வருகின்றோம். 2007ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு அன்று இந்த வெளியீட்டைத் தொடங்கினோம். இதுவரை தொடர்ந்து 2 வருடங்களுக்கு மேலாக பல வெளியீடுகளை இந்த வலைப்பூவின் வழி செய்திருக்கின்றோம்.
அண்ணா: என்னென்ன வகையான வெளியீடுகள்?
சுபா: 'மண்ணின் குரல்' ஒலிப் பதிவுகளைத் தாங்கி வருகின்ற ஒரு பகுதி. தமிழர் மரபு சார்ந்த எல்லா வகையான விஷயங்களும் அவை பற்றிய செய்திகளும் தொகுக்கும் வகையில் இந்தச் செய்திகள் இருக்க வேண்டும் என்பதே எண்ணம். ஆக இந்தப் பதிப்புகளில் மொழி, இலக்கியம், வாய்மொழி இலக்கியம், வரலாற்றுச் செய்திகள், தத்துவ விளக்கம், பாரம்பரிய இசை, கர்நாடக இசை, சமையல் கலை, உழவர் வாழ்க்கை, கல்வெட்டுகள், நூல் விமர்சனம் எனப் பல வகைப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்படுகின்றன. உதாரணமாக:
* திரு.வி.க. பற்றிய சிந்தனைகள்
* உழவர் வாழ்க்கை நிலை
* இப்போது பெரும்பாலும் வழக்கில் இல்லாத சில சமையல் குறிப்புகள்
* இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் குடி பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவு
* மதராச பட்டினத்தின் கதை
எனச் சில தொடர் பேச்சுகளும் மாதா மாதம் வெளியிடப்பட்டுள்ளன.
இது மட்டுமன்றி தமிழ் மரபு தொடர்பான சமகால நிகழ்வுகளின் பதிப்புகளும் கூட இணைக்கப்படுகின்றன. இதன் வழி மரபு தொடர்பான பல்வகைப்பட்ட செய்திகள் உலக மக்களுக்கு இணையம் வழி வழங்க முடிகின்றது.
Jul 11, 2009
* Do not use semicolon(;)