
ராஞ்சி, நவ.5 (டிஎன்எஸ்)
ரூ.4,500 கோடி ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடா, மருத்துமனையில் இருந்து திரும்பியதும் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை வருமான வரித்துறையினர் செய்திருக்கின்றனர்.
நாட்டின் பல இடங்களில் உள்ள மதுகோடாவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி மற்றும் அமலாக்கத்துறைகளின் அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இதில் அவர் பல ஆயிரம் கோடி ஊழல் மற்றும் ஹவாலா குற்றங்கள் புரிந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது.
மதுகோடா டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ரூ.4,800 கோடிக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றையே வாங்குவதற்கு விலை பேசியதும் இப்போது தெரிய வந்துள்ளது. அவருக்கு நெருக்கமான ஆட்கள் மூலம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கான பணத்தை ஈரோ பணம் மூலம் கொடுக்க முன் வந்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். மதுகோடாவுக்கு இதை வாங்க மும்பையைச் சேர்ந்த மனோஜ் புனாமியா என்பவர் பேரம் பேசி இருக்கிறார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் சில லாக்கர்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர்.
இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கோடா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கும் அவரது சகாக்கள் 6 பேருக்கும் வருமான வரி மற்றும் அமலாக்கத்துறைகள் சம்மன் அனுப்பியுள்ளன. நாளைக்குள் தமது அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. தவறினால், சட்ட ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்குத் தெரிவிக்காமல் மது கோடாவை சிகிச்சை முடித்து அனுப்பக்கூடாது எனவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)