மும்பை, நவ.5 (டிஎன்எஸ்)
மகாராஷ்டிராவில் இலாகா பங்கீட்டில் காங்கிரஸ்., தேசியவாத காங். இடையே இன்று உடன்பாடு ஏற்படுகிறது. புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையடுத்து, 2 வாரமாக இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வருகிறது.
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வார காலமாகியும் புதிய அரசு பதவி ஏற்க வில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இடையே அமைச்சர் பதவி பங்கீடு, இலாகா ஒதுக்கீடு ஆகியவற்றில் பெரும் சிக்கல் எழுந்தது.
இதில் அமைச்சர் பதவி பங்கீட்டில், தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரசுக்கு 22 அமைச்சர்கள், தேசியவாத காங்கிரசுக்கு 20 அமைச்சர்கள் என இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தேசியவாத காங்கிரசை விட 20 இடங்கள் அதிகமாக கைப்பற்றிய காரணத்தால் முக்கியமான உள்துறை, நிதி, மின்சாரம் போன்ற இலாகாக்களை காங்கிரஸ் தன் வசம் வைத்துக்கொள்ள விரும்பியது. ஆனால் ஏற்கனவே வகித்து வந்த இந்த இலாகாக்களை விட்டுத்தரமுடியாது என்று தேசியவாத காங்கிரஸ் உறுதியாக நின்றது. இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்காத காரணத்தால் புதிய அரசு பதவி ஏற்க முடியவில்லை.
பெங்களூரில் நேற்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சருமான பிரபுல் பட்டேல், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், "தற்போதைய இழுபறி நிலைமை நாளைக்குள் (இன்றைக்குள்) முடிவுக்கு வந்துவிடும். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே வெற்றி கிடைக்கிற நிலை ஏற்படும். இலாகா பங்கீட்டுப்பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. அமைச்சரவை அமைப்பது சுமூகமாக நடைபெற்றுவிடும்'' என தெரிவித்தார்.
இதே போன்று மும்பையில் அரசு தலைமைச்செயலகத்தில் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்ற முதலமைச்சர் அசோக் சவானும் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் இடையே (காங்.- தேசியவாத காங். இடையே ) எந்த உள்மோதலும் இல்லை. கருத்து வேறுபாடுகளும் கிடையாது. நாங்கள் ஆளுநரின் கருத்தை மதிக்கிறோம். அடுத்த 48 மணி நேரத்தில் புதிய அரசை அமைப்போம்.
அரசு இன்னும் இருக்கிறது. செயல்பாட்டில் உள்ளது. நான் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறேன். எல்லாப்பிரச்சினைகளும் இன்று மாலைக்குள் அல்லது நாளைக்குள் தீர்ந்து விடும் என்றார்.
எனவே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே இலாகா பங்கீட்டில் இன்று உடன்பாடு ஏற்பட்டு, இரு கட்சித்தலைவர்களும் ஆளுநரைச் சந்தித்து அரசு அமைக்க முறைப்படி உரிமை கோருவார்கள்.
அதையடுத்து புதிய அரசு அமைக்க முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அசோக் சவானுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார். அதைத் தொடர்ந்து நாளை புதிய அரசு பதவி ஏற்று விடும் என நம்பப்படுகிறது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)