
ஐதராபாத், நவம்பர் 05, 2009 (டிஎன்எஸ்)
இந்திய அணிக்கு எதிரான பரபரப்பான 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மயிரிழையில் வெற்றி பெற்றது. 17 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்ததோடு 175 ஓட்டங்களையும் சச்சின் விளாசிய போதும் இந்தியா தோல்வி அடைந்தது.
பூவா - தலையா வென்று முதலில் மட்டை பிடித்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் மார்ஷ் 112 ஓட்டங்களும், வாட்சன் 93 ஓட்டங்களும், வொயிட் 57 ஓட்டங்களும், பாண்டிங் 45 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்திய அணி தரப்பில் பிரவீன்குமார் 2 விக்கெட்டுகளும், நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 351 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
ஆயினும் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 347 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி பெற்றது.
ஆயினும் இந்த ஆட்டத்தின் மூலம் சச்சின் ஒருநாள் போட்டிகளில் 17,000 ஓட்டங்களைக் கடந்து, சாதனை படைத்தார். அத்துடன் 141 பந்துகளில் 175 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்து, ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். இதில் 4 சிக்சர்களும் 19 பவுண்டரிகளும் அடங்கும். சச்சின் ஆட்டத்தை விமர்சித்தவர்களுக்கு அவர் தன் மட்டை மூலம் பதில் அளித்துள்ளார்.
சச்சின் ஆட்டமிழந்ததும் இந்தியாவின் கடைசி வரிசை ஆட்டக்காரர்கள் மளமளவென ஆட்டமிழந்து, இந்தியாவின் தோல்விக்கு வழி வகுத்துவிட்டனர். இதில் தேவையற்ற சில ரன் அவுட்டுகளும் அடங்கும். வெற்றிக்காக இந்தியா, கடுமையாகப் போராடியது. 351 என்ற இமாலய இலக்கினை விரட்டித் தொட்டு விடும் தொலைவில் இருந்தது. ஆயினும் கடைசி ஓவரில் இரு பந்துகள் மீதமிருந்த போதும் இந்தியா தோற்றது. இது, இந்திய ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது.
இந்தியா தோல்வியுற்ற போதும் அதிரடியாக ஆடிய சச்சின், ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் 7 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா, 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)