
ஹைதராபாத், நவ.5 (டிஎன்எஸ்)
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச ஒருநாள் போட்டியில் 17 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளைப் புரிந்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனை வரலாற்றில் இன்று மேலும் ஒரு சாதனை மகுடம் சூட்டப்பட்டது.
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் 17 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்த போது 17 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற இச்சாதனையைப் புரிந்தார் சச்சின்.
சச்சின் டெண்டுல்கர், 1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி குஜ்ரன்வாலாவில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை 435 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர், 45 சதம் மற்றும் 91 அரை சதம் எடுத்து 17 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் எடுத்துள்ளார்.
இதேபோல் டெஸ்ட் போட்டி வரலாற்றில் அவர், 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 சதம் மற்றும் 53 அரைசதம் எடுத்து 12,773 ரன்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்னாக ஆட்டமிழக்காமல் 248 ரன்கள் எடுத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்து இந்தியாவிற்கு மேலும் பல பெருமைகளைச் சேர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)