சென்னை, செப்.24 (டிஎன்எஸ்)
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டினையொட்டி அந்நிறுவனப் பணியாளர்களுக்குத் தங்க காசு வழங்க துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முகமது நசீமுத்தின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் 1984ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன் முதல் காகித உற்பத்தியைத் தொடங்கியது. தற்போது, காகித உற்பத்தியில் தனது வெள்ளி விழா ஆண்டினைக் கொண்டாடி வருகிறது.
இதனையொட்டி, துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தனது அனைத்து நிரந்தர பணியாளர்களுக்கும் தலா 6 கிராம் தங்க காசும், அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் தலா 3 கிராம் தங்க காசும் வழங்கவுள்ளது.
3.10.2009 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வெள்ளி விழாவில் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணியாளர்களுக்கு தங்க காசுகளை வழங்குவார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Sep 24, 2009
* Do not use semicolon(;)