அசாம், மேகாலயாவில் கடும் மழை – 11 பேர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம், மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் அசாமில் இதுவரை 82 பேர் பலியாகி உள்ளனர். இதனை மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் பலியாகி உள்ளனர். தர்ராங், நாகோன், கச்சார், திப்ரூகர், ஹோஜாய், ஹைலகண்டி போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 2.31 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர். இதுபோல தேசிய விலங்குகள் பூங்காவிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள விலங்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அசாம் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை டெலிபோனில் அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தார். மேலும் அசாமில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools