அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியிருந்த நிலையில், ஐகோர்ட்டும் அனுமதி அளித்ததால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் அன்று நடந்து முடிந்தது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அன்றே ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அவரது 2 மகன்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரையும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்ளை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறி வருகிறார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கட்சிக்குள் மோதல் நீடித்து வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நேற்று மாலை வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் நாளை மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், பொதுக்குழு கூட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவில் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும் என்கிற விதி கடைபிடிக்கப்படவில்லை. எனவே பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன், 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். வருகிற திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது தொடர்பாக வழக்கு விசாரணையின்போது கட்சியின் உள் விவகாரங்களில் கோர்ட்டு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தலையிட முடியாது என்கிற கருத்தும் உள்ளது. இதன்படி பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறி உள்ளனர். இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு அ.தி.மு.க.வினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools