X

அதிமுக வின் 3 அணுகுண்டு திட்டங்கள்! – அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவையில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முக்கியமான தேர்தல் ஆகும். எனவே நாம் தேர்தல் பணிகளை முழுவீச்சாக செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகும் வகையில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

பொங்கலுக்கு அனைவரது குடும்பத்துக்கும் முதல்-அமைச்சர் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கினார். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த மூன்று திட்டங்களும் 3 அணுகுண்டுகள் போன்றவை. இந்த திட்டம் மூலம் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags: south news