அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுவிட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் மத்தியில் அவர் பேசியதாவது:

கடந்த சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து, தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஆனால் பதவி ஏற்ற 14 மாதங்கள் ஆகியும், கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. குடும்ப தலைவிகளுக்கு, மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவோம் என்றதை இன்றளவும் செயல்படுத்த வில்லை.

சமையல் எரிவாயு விலையை குறைப்போம் என்பதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. அத்திக்கடவு -அவினாசி திட்டம் நியாயப்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நிறைவேறி இருக்க வேண்டும். ஆனால் வேண்டும் என்றே, அந்த திட்டத்தை இன்றளவும் நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு காலம் கடத்தி வருகிறது. பெருந்துறை தொகுதியின் தாகம் தீர்க்கும் திட்டமான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டமும், இன்றுவரை மக்களின் பயன்பாட்டுக்கு வந்து சேரவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools