அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் – தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேச்சு

மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என பா.ஜ.க. ஆட்சியின் போது கூறினார்கள். தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதைப்பற்றியே பேசுகிறார்கள். அணை கட்டுவதை தமிழகமும், தமிழர்களும் அனுமதிக்கமாட்டார்கள்.

மேகதாது விவகாரம் 2 மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நிச்சயம் நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்.

தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியில் வருமானவரி அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். கடமையை செய்ய வந்த அதிகாரிகள் தங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என போலீசார் சொல்வது வேடிக்கையாக உள்ளது. காவல்துறை இன்று ஏவல் துறையாக மாறியுள்ளது. அதிகாரிகளை தாக்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை தான் கைது செய்ய வேண்டும். அப்போது தான் கடமையை செய்ய வரும் அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்தது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை ஆகும். அதில் எதற்கு சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள்? என தெரியவில்லை. முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் ரூ.1000 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools