X

அம்பாலா விமானப்படை தளத்தில் நடந்த விழா – ரபேல் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு

உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. துல்லிய தாக்குதலுக்கு பெயர் பெற்ற இந்த விமானங்கள், ஜூலை 27-ந் தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன.

இந்நிலையில், இந்த விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன. இதற்கான விழா, அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்றது. முதலில், ரபேல் விமானம், முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அனைத்து மத வழிபாட்டுடன் சம்பிரதாய பூஜை (சர்வ தர்ம பூஜை) செய்யப்பட்டது. பின்னர் ரபேல் விமானங்கள் மற்றும் தேஜஸ் விமானங்கள் வானில் சாகசங்கள் நிகழ்த்திக் காட்டின. ரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீ‌‌ஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.