அரசின் அழுத்தத்தால் தான் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்ததா? – சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகளில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மேற்படி தடுப்பூசி தயாரிப்பில் அரசியல் அழுத்தம் இருந்ததாக தற்போது சில ஊடகங்களில் தகவல் வெளியானது. அரசியல் அழுத்தம் காரணமாக தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டதாகவும், இதனால் சில குறிப்பிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தன.

மேலும், தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது இந்திய மருத்துவம் மற்றும் விஞ்ஞான துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதில் எவ்வித அரசியல் நெருக்கடியும் இல்லை. அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டு, பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகள் ஆராயப்பட்டே அனுமதி வழங்கப்பட்டது. மக்களை குழப்பும் வகையில் பொய் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools