அரசு சொத்துகளை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் கடைபிடித்து இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு லோக்சபா தேர்தலின்போது நாங்கள் வெற்றிப் பெற்றால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என ஆட்சிக்கு வந்தது. ஆனால் தர வில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல்- ரூ 65, டீசல்- ரூ 55 , கியாஸ் சிலிண்டர் ரூ 450 மானியத்துடன் கொடுத்தோம். ஆனால் இன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. டீசல் சமையல் எரிவாயு விலை அனைத்தும் எகிறிவிட்டது.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மறைப்பதற்காக ஜி-20 மாநாட்டினை நடத்தி 4 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி வீணடித்துள்ளார். நூற்றுக்கணக்கான அரசு சொத்துகளை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்த்தும் உள்ளார்.

சிறுபான்மை, தலித் சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. புதுச்சேரியை ஊழல் இல்லாத பெஸ்ட் மாநிலமாக மாற்றுவேன் என்று மோடி கூறினார். ஆனால் புதுச்சேரி பெஸ்ட் அல்ல. வொஸ்ட் மாநிலமாக மாறிவிட்டது. மது கடைகளை திறந்து விட்டதால், மக்களுக்கு அமைதி இல்லை. கல்வி தரம் குறைந்து விட்டது. வியாபாரம் படுத்துவிட்டது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வருகிற லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news