ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இழப்பீடு வழங்க வேண்டும் – பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள முதல்தான் நகரில் தொடங்கியது. இந்திய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன.

பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டது. 6 லீக் ஆட்டத்தில் 3 ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நடைபெற்றது. 3 போட்டிகள் இலங்கையில் நடந்தது. சூப்பர்-4 சுற்றின் 6 போட்டிகளில் முதல் ஆட்டம் பாகிஸ்தானில் நேற்று நடந்தது. சூப்பர்-4 சுற்றின் எஞ்சிய 5 ஆட்டங்களும், இறுதிப்போட்டியும் இலங்கையில் உள்ள கொழும்பில் நடக்கிறது.

ஆசிய கோப்பை போட்டியின் மொத்தம் 13 போட்டிகளில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடந்துவிட்டது. 9 போட்டிகள் இலங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்தியதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) தெரிவித்துள்ளது.

இதற்கு இழப்பீடு கேட்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது. இதுகுறித்து பி.சி.பி. அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஸ்ரப் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) தலைவர் ஜெய்ஷாவுக்கு இழப்பீடு கோரிக்கையை கோடிட்டு முறைப்படி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.சி.சி.யின் மற்ற நிர்வாக குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இடங்களை மாற்றுவதற்கான கடைசி நிமிட முடிவுகளை எடுத்ததற்கு யார் பொறுப்பு என்று அவர் தனது கடிததத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். போட்டிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த முக்கிய முடிவுகளில் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எவ்வாறு பதில் அளிக்க போகிறது மற்றும் இழப்பீடு ஏதேனும் வழங்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports