ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்களா? – ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். மூன்றாம் நாளான நேற்று எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் கடந்த காங்கிரஸ் மாநில மகளிர் மாநாட்டை ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:-

நமது கட்சியில் இன்று ஒரு பெண் முதல்-மந்திரி கூட இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரிகளாகும் நற்பண்புகள் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் தனது கட்டமைப்புக்குள் பெண்களை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.

பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்று காங்கிரஸ் அடிப்படையில் நம்புகிறது.ஆண்களை விட பெண்கள் பல வழிகளில் உயர்ந்த வர்கள். ஆண்களை விட அவர்களுககு பொறுமை அதிகம். அதிக உணர்திறன் மற்றும் இரக்கமுள்ளவர்கள். அதிகார கட்டமைப்பின் ஒரு பகுதியாக பெண்கள் இருக்க வேண்டும்.

பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற போதிலும், அதை அமல்படுத்தாமல் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அதன் முழு வரவலாற்றிலும் பெண்களை அதன் அணிகளில் அனுமதிக்கவில்லை. இதற்கு முன் இதை நான் இருமுறை கூறியபோது, தங்களிடம் பெண்கள் அமைப்புகள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது. ஆனால் அவர்களிடம் பெண்கள் அமைப்புகள் இருக்கிறதா இல்லையா? என்பது கேள்வி அல்ல.

ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்களா? என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கு முழுமையாக இல்லை என்பதே பதில். இந்திய அரசியலை ஆழமாக பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசுக்கு இடையேயான உண்மையான சண்டை, அரசியலில் பெண்களின் பங்கை பற்றியது என்பதை நீங்கள் காணலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news