X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டி20 போட்டி – இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மலான் 82 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணி 20 ரன்னில் முதல் விக்கெட்டை(பிஞ்ச்) இழந்தது. அடுத்த ஓவரில் வார்னர் அவுட் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் (8 ரன்னில்)வந்த வேகத்தில் வெளியேறினார்.

இதனையடுத்து மிட்செல் மார்ஷ் – டிம் டேவிட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் 45 ரன்னிலும் டிம் டேவிட் 40 ரன்னிலும் ஆட்டமிழக்க இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

ஆட்டநாயகனாக மலான் தேர்வு செய்யப்பட்டார். முதல் டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.