இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – 2ம் நாள் முடிவில் இந்தியா 7/421 ரன்கள் சேர்ப்பு

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி 70 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 119 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜெய்ஸ்வால் 80 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் 34 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜடேஜாவுடன் ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 68 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரீகர் பரத் 41 ரன்னில் அவுட்டானார். அஸ்வின் ஒரு ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய அக்சர் படேல் நிதானமாக ஆடினார்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் படேல் 35 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் இந்திய அணி இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports