இங்கிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்கியது

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் அங்கமான இந்த தொடர் கடந்த ஆண்டு நடக்க இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தற்போது அரங்கேறுகிறது.

கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணிக்கு முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் திரும்பி இருக்கிறார். தசைப்பிடிப்பு காரணமாக கடந்த மாதம் நடந்த தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகிய மேத்யூஸ் உடல் தகுதியை எட்டியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது வருகை அணியின் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்க்கும். இந்த தொடரில் மேத்யூஸ் 19 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடப்பார்.

ஆடுகளம் சுழலுக்கு சாதகமானது என்பதால் இங்கிலாந்து அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதலை தொடுக்கும் வியூகத்துடன் களம் காணுகிறது. 2018-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி, இலங்கையை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தி இருந்தது. அதே போல் மீண்டும் சாதிக்கும் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி வரிந்து கட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 34 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் இங்கிலாந்தும், 8-ல் இலங்கையும் வெற்றி ெபற்றுள்ளன. 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools