இந்தியாவில் புதிதாக 12,781 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 12,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 13,216 ஆக இருந்தது. நேற்று 12,899 ஆக குறைந்த நிலையில் இன்று 2-வது நாளாக சரிந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் 4,004, கேரளாவில் 3,376, டெல்லியில் 1,530, தமிழ்நாட்டில் 692, கர்நாடகாவில் 623, உத்தரபிரதேசத்தில் 490, அரியானாவில் 486, மேற்கு வங்கத்தில் 362, குஜராத்தில் 244, தெலுங்கானாவில் 236, பஞ்சாபில் 103 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் சுமார் 79 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய வாரத்துடன் (48,766) ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகம் ஆகும். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 473 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 8,537 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் 76,700 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 4,226 அதிகம் ஆகும். கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் 11 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர நேற்று டெல்லியில் 3, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் என மேலும் 18 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,873 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 196 கோடியே 18 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 2,80,136 டோஸ்கள் அடங்கும். இதற்கிடையே நேற்று 2,96,050 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.81 கோடியாக உயர்ந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools