இந்தியாவில் புதிதாக 2,745 பேருக்கு கொரோனாபாதிப்பு

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 29-ந் தேதி பாதிப்பு 2,828 ஆக இருந்தது. மறுநாள் 2,706 ஆகவும், நேற்று 2,338 ஆகவும் குறைந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக கேரளாவில் 726 பேருக்கு தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி பாதிப்பு 700-ஐ தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மும்பையில் கடந்த 114 நாட்களில் இல்லாத அளவாக புதிதாக 506 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 832 ஆக உயர்ந்தது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2,236 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை மொத்தம் 4 கோடியே 26 லட்சத்து 17 ஆயிரத்து 810ஆக உயர்ந்தது.

தற்போது 18,386 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 503 அதிகம் ஆகும்.

நேற்று 10,91,110 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை மொத்தம் 193 கோடியே 57 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 4,55,314 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.08 கோடியாக உயர்ந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools