இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மத்திய அரசு தகவல்

கொரோனா 2-ம் அலை பாதிப்பு நாள்தோறும் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இது கடந்த 543 நாட்களில் இல்லாத அளவு குறைவாகும். நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் பரிசோதனை 7.83 லட்சமாக குறைந்திருந்தது. இதுவும் தினசரி பாதிப்பு இந்த அளவில் குறைய ஒரு காரணமாக கூறப்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 3,698 பேருக்கு தொற்று உறுதியானது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 480 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 180 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 236 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,66,147 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 12,202 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 46 ஆயிரத்து 749 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 536 நாட்களில் இல்லாத அளவில் 1,13,584 ஆக குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 54,726 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று 71,92,154 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 117 கோடியே 63 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி மொத்தம் 63.34 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 9,64,980 மாதிரிகள் அடங்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools