X

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் லெவன் அணியை உருவாக்கிய நாசர் உசேன்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.) 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

அதில் இந்திய அணி வீரர்கள் 4 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். அதை தவிர விராட் கோலி, அஸ்வின், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேமரூன் கிரீன், அலேக்ஸ் கேரி, அஸ்வின், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், முகமது ஷமி.

இது குறித்து நாசர் உசேன் கூறியதாவது:-

பேட் கம்மின்ஸ் எளிதான தேர்வாக இருந்தது. ஸ்டார்க் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும், ஒவ்வோரு பந்தையும் மாறுபட்டு (variation) வீசுவதாலும் அவரை 10-வது வீரராக தேர்வு செய்தேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துணைக் கண்டத்திலோ அல்லது இந்தியாவிலோ நடந்தால், நான் ஜடேஜாவை தேர்வு செய்திருப்பேன். ஆனால் இந்த போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் அவரை தேர்வு செய்யவில்லை. ஆல்-ரவுண்டராக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை தேர்வு செய்வேன். அவர் 8-வது இடத்தில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.