இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வைகோ பேச்சு

திருச்சி சிறுகனூரில் திருச்சி மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.

பின்னர் திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் இது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள் சனாதன சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கிறது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.

தமிழகத்திலே புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். பா.ஜ.க. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கெஜ்ரிவாலை கைது செய்து கொண்டு போனார்கள். இந்துத்துவா அஜண்டா ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர்.

பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஜனநாயக ஜனநாயகத்திற்கு மதச்சார்பற்ற தன்மைக்கும் சமதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம், இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது. இது பெரியார் பூமி.

இவ்வாறு வைகோ கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools