இந்திய அணியின் பீல்டிங் மோசமாக உள்ளது – ரவி சாஸ்திரி கவலை

ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் 16 அணிகள் போட்டி போட காத்திருக்கின்றன.

இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற உறுதியான நம்பிக்கை பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது ஆரம்பத்திலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் 130 கி.மீ வேகத்தில் மட்டும் வீசுபவர்களாக இருப்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகின்றனர்.எனவே இத்தொடரில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு பேட்டிங் துறை சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் பேட்டிங், பவுலிங் என்பதைத் தாண்டி உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:-

இந்த அணியுடன் கடந்த 6 -7 வருடங்களாக நான் இருந்துள்ளேன். முதலில் பயிற்சியாளராக இருந்த நான் தற்போது வெளியிலிருந்து பார்க்கும்போது டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே தற்போதுள்ள பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ளது. 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், 5-வது இடத்தில் ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பண்ட், 6-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் இருப்பது பேட்டிங் துறையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் பீல்டிங் துறையில் இப்போதில் இருந்தே இந்தியா கடுமையான பயிற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக பீல்டிங் துறையில் இந்திய அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெனில் அதில் மிச்சப்படுத்தும் 15- 20 ரன்கள் வெற்றியில் உங்களை காப்பாற்றும். இல்லையேல் ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பேட்டிங் செய்யும் போது எக்ஸ்ட்ராவாக 15 – 20 ரன்கள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் மாயாஜால பீல்டிங் செய்கின்றன. குறிப்பாக சமீபத்திய ஆசிய கோப்பையில் இலங்கை பீல்டிங் துறையில் என்ன செய்தது என்பதை பாருங்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அபாரமான பீல்டிங் செய்ததன் காரணமாகவே குறைந்த அளவிலான வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools