இந்திய எல்லையில் மீண்டும் அத்துமீறிய சீன ராணுவம்

இந்திய மற்றும் சீன படைகள் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்தது. இரு தரப்பும் படைகளை குவிக்கத் தொடங்கின. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு படைகளை விலக்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் எல்லையில் அமைதி திரும்பத் தொடங்கியது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29ம் தேதி நள்ளிரவில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எல்லையில் நிலைமையை மாற்ற ஆத்திரமூட்டும் செயல்களை மேற்கொண்டதாகவும் இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை முன்கூட்டியே நிறுத்தி, நமது நிலைகளை வலுப்படுத்தவும், சீன படைகளின் நோக்கங்களை முறியடிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கர்னல் அமான் ஆனந்த் கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக ராணுவ தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools