இந்திய பெண்கள் டி20 அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா பாதிப்பு

இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் சமீபத்தில் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடினார். காயம் காரணமாக அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார். பஞ்சாப்பை சேர்ந்த 32 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு கடந்த 4 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் டாக்டர்களின் அறிவுரையின்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர் விரைவில் களம் திரும்புவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேபோல் சமீபத்தில் ராய்ப்பூர் மற்றும் மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜாம்பவான் அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அந்த அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரர்கள் யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள். இந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்று இருந்த 36 வயது முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அவர் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் இர்பான் பதான் அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools