இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – 136 ரன்களில் ஆல் அவுட் ஆன இங்கிலாந்து மகளிர் அணி

பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தீப்தி ஷர்மா 67 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ரேனுகா சிங் 1 ரன்னிலும், கயக்வாட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 104.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி தடுமாறியது. இங்கிலாந்து வீராங்கனையான நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மட்டும் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார். அடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் இங்கிலாந்து அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 292 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports