இன்னும் வசூலிக்கப்படாத வாரக்கடன் ரூ..8.79 லட்சம் கோடி என்ன ஆனது? – அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி சுவெங்கடேசன் கேள்வி

இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல கோடிகளை கடனாக பெற்ற பல தொழிலதிபர்கள் அவற்றை முறையாக திருப்பி செலுத்தாததன் விளைவாக வங்கிகள் அவற்றை வாராக்கடனாக தங்கள் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டு இவற்றால் வங்கிகளின் நிகர லாபங்கள் குறைவதும் தொடர் கதையானது.

சில வருடங்களுக்கு முன் இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பிய போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வராக்கடன்கள் என்பது வேறு; கடன் தள்ளுபடி என்பது வேறு – வராக்கடன்கள் மீண்டும் வங்கிகளுக்கு கிடைக்க போகும் பணம்தான்” என பதிலளித்திருந்தார்.

மேலும், சில தினங்களுக்கு முன் அவர், “மத்தியில் 2004 தொடங்கி 2014 வரை ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி நடந்த போது கடன் பெற தகுதியற்ற பலருக்கு பொதுத்துறை வங்கிகள் கடன்கள் வழங்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டன. இவற்றை மீட்டெடுக்க மத்திய ரிசர்வ் வங்கி, நான், பிரதமர், வங்கி அதிகாரிகள் இணைந்து திட்டமிட்டோம். அதன்படி எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாக அமலாக்க துறை ரூ.15,186.64 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பண மோசடி தடுப்பு சட்டம் மூலம் மீட்டு அவை அந்தந்த பொதுத்துறை வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர், சு. வெங்கடேசன் (53), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள வராக்கடன்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் சு. வெங்கடேசன் பதிவிட்டிருப்பதாவது:

வராக்கடன் என்றால் வசூலாகும் கடன்தான் என்று எப்போதும் நிதியமைச்சர் விளக்கம் தருவார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் ரூ.8.79 லட்சம் கோடி என்ன ஆனது? பதில் சொல்லுங்கள், வராக்கடனா ? வஜாக்கடனா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news