இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் – நியூசிலாந்து வெற்றி பெற 257 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேரில் மிட்செல் 102 ரன்னும், மேட் ஹென்றி 72 ரன்னும், டாம் லாதம் 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 18 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். சண்டிமால் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செய டி சில்வா 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் டிக்னெர் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. இறுதி நாளான இன்று நியூசிலாந்து வெற்றி பெற 257 ரன்கள் தேவை என்பதாலும், இலங்கை வெற்றி பெற 9 விக்கெட்டுகள் தேவை என்பதாலும் கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools