இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – இந்தியா அபார வெற்றி

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சமிகா கருணாரத்னே 43 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தார். கேப்டன் சனகா 39 ரன்களும், அசலங்கா 38 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் தீபக் சாகர், யுஸ்வேந்திர சாகல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர் பிருத்வி ஷா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் ஷிகர் தவான்- அறிமுக வீரர் இஷான் கிஷன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

குறிப்பாக, இஷான் கிஷன் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இஷான் கிஷன், 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். அவர் 59 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கேப்டன் தவானும் அரை சதம் கடந்து முன்னேறினார்.

மணீஷ் பாண்டே 26 ரன்களில் அவுட் ஆனதும், சூரியகுமார் யாதவ், கேப்டன் தவானுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் தவான் 86 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2வது போட்டி நாளை நடைபெறுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools