இலங்கை அதிபர் மாளிகையில் குவிந்த குப்பைகள்! – மூட்டைகளாக கட்டி வைத்த போராட்டக்காரர்கள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மறுபுறம் என அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.

போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அதிபரின் வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். தற்போது வரை போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே உள்ளனர்.

கோத்தபயா தப்பியோடிய நிலையில் அவரது வீட்டை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களை பயன்படுத்தினர். இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து வைரலானது. இதேபோன்று, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டும், மதிய உணவு உண்பது உள்ளிட்ட வீடியோக்களும் வெளிவந்தன.

இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் உபயோகித்தது போக மீதமுள்ள பொருட்கள், குப்பைகள், கழிவு பொருட்கள் ஆகியவை மலைபோல் திரண்டன. அவற்றை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஒன்றாக சேர்ந்து, திரட்டி மூட்டைகளாக கட்டி வைத்துள்ளனர்.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கூறும்போது, கழிவு பொருட்களை தூய்மை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. ஏனெனில் இது ஒரு பொது இடம். இலங்கையில் உள்ள நடைமுறையை எங்களுடைய தலைமுறை மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தி நாங்கள் ஒரு செய்தியை அவருக்கு தெரிவித்து விட்டோம். இதன்பின் நாங்கள் தற்போது அமைதியாக இருக்க வேண்டிய தருணமிது என அவர் கூறியுள்ளார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools