X

இளையராஜா முன்பு ஒரு பக்தனாக நின்றேன்! – தனுஷ் நெகிழ்ச்சி

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், ‘எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி. எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன். மாரி நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும்.

மாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார். அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். நான் எழுதிய வரியை பார்த்து, முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் சம்மந்தமே இல்லை என்றார். பின்னர் படித்து பார்த்து பாடி கொடுத்தார்.

என் கிட்ட ஒரு சில வீடியோக்கள் இருக்கிறது அதை அப்புறம் பகிர்கிறேன். ஒரு குழந்தையாக, ஒரு பக்தனாக அவர் முன்னாடி நின்ற சில நேரங்கள் என்னால் மறக்கவே முடியாது’ என்றார்.