இ-டிக்கெட் எடுப்பது குறித்து வெளியான புதிய தகவல்! – மறுப்பு தெரிவித்த ரெயில்வே அமைச்சகம்

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், வெவ்வேறு குடும்ப பெயர்களுடன் கூடிய மற்றவர்களுக்கு தங்கள் கணக்கில் ரெயில்வே இ-டிக்கெட் எடுக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவற்றுக்கு ரெயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ-டிக்கெட் எடுக்கலாம். இதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. ஒருவர் தனது பயனாளர் ஐ.டி.யை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இ-டிக்கெட் எடுக்கலாம்.

ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 இ-டிக்கெட் வரை பதிவு செய்யலாம். கணக்கு வைத்திருப்பவர் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால், மாதத்துக்கு 24 இ-டிக்கெட் வரை எடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு பயணியாவது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்த டிக்கெட்டுகளை வணிகரீதியாக விற்கக்கூடாது. அப்படி செய்வது ரெயில்வே சட்டப்படி குற்றச்செயல் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools