உக்ரைனில் இருந்து ரஷிய துருப்புகள் வெளியேறினால் தான் பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன், பதில்தாக்குதல் நடத்தி ரஷியா ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஆப்பிரிக்கா தலைவர்கள் இருநாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். முதற்கட்டமாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். அப்போது அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

ஆப்பிரிக்கா தலைவர்கள் இன்று ரஷிய அதிபர் புதினை சந்திக்க இருக்கிறார்கள். இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:-

ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து ரஷிய துருப்புகள் வாபஸ் பெற்ற பின்னரே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளது. ரஷிய அதிபர் புதினை ஆப்பிரிக்கா தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இது அவர்களின் முடிவு. இது எப்படி பொருத்தமுடையதாக இருக்கும்.

உண்மையிலேயே இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆக்கிரமிப்புக்காரர்கள் எங்கள் நிலத்தில் இருக்கும்போது, ரஷியாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தயாராகுவது, எங்களது நிலத்தை முடக்குவதாகும். அது எல்லாவற்றையும் முடக்குவதற்கு சமம். இது வலி மற்றும் துன்பம். எங்களுக்கு உண்மையான அமைதி தேவை. அதற்கு எங்களது நிலத்தில் இருந்து ரஷியா துருப்புகள் உண்மையாகவே வெளியேற வேண்டும்.

இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ரஷிய துருப்புகள் உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேறும் வரை புதின் உடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதில் ஜெலன்ஸ்கி உறுதியாக உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news