உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது – ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்

ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்க்-குடன், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, உக்ரைனில் தற்போதைய நிலைமை குறித்து இரு மந்திரிகளும் விவாதித்தனர்.

அழிவை ஏற்படுத்தும் குண்டுகள் மூலம் ஆத்திரமூட்டும் செயல்களில் உக்ரைன் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்க் அப்போது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார். இரு நாடுகள் இடையேயான மோதலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

மேலும் போரில் கதிரியக்க ஆயுதங்களை பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரானது என்பதால், இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் உள்பட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு மந்திரிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பில் இருக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools