உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் உதவி – அமெரிக்கா வழங்குகிறது

ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன்- ரஷியா பிரதிநிதிகள் இடையே நேற்று முன்தினம் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் நகரில் போர் பகுதியில் இருந்து ரஷிய ராணுவத்தின் சில பிரிவுகள் வெளியேறும் என ரஷியா தெரிவித்தது.

ரஷியாவின் இந்த உறுதிமொழியை உக்ரைன், அமெரிக்கா நம்ப மறுத்துள்ளன.

ரஷியா பின்வாங்குவது அல்லது போரில் இருந்து விலகுவது என்பதை விட கீவ் நகரை சுற்றி உள்ள படைகளை சிறிய அளவில் நகர்த்திக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools