உட்கோட்டு அனுமதி பட்டியலில் மணீப்பூர் மாநிலமும் சேர்ப்பு!

’உட்கோட்டு அனுமதி’ என்பது ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் ஒரு குறிப்பிட்டப் பாதுகாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டப் பகுதிக்குள் நுழைய ஒரு குறிப்பட்ட கால அளவிற்கு வழங்கப்ப்படும் அனுமதி சீட்டு ஆகும். குறிப்பாக, இது இந்தியாவின் சில வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வழங்கப்படும் அனுமதியைக் குறிக்கும்.

இந்தச் சீட்டு வெறும் நுழைவு அல்லது பயண அனுமதி மட்டுமே; தங்குவதற்கல்ல. இதைத் தவிர, வெளி மாநிலத்தவர் இப்பகுதிகளில் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது; கலப்புத் திருமணம் செய்ய முடியாது போன்ற நிபந்தனைகளும் உண்டு.

வரலாற்றின் அடிப்படையில் தேநீர், எண்ணெய், யானை தந்தம், காண்டாமிருக கொம்பு மற்றும் தோல் ஆகிய தொழில்களுக்குப் போட்டியாக பிற ஆங்கில நிறுவனங்கள் மற்றும் தனியார் வருவதைத் தடுக்கும் எண்ணத்தில் இந்த அனுமதி, 1873-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்டதாகும்.

‘வங்க எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறை’ என்றழைக்கப்பட்ட இந்த முறையின் மூலம் மிசோரம், நாகாலாந்தின் மலைப்பகுதிகளான சின், லுஷாய் மற்றும் நாகா குன்றுகளில் இந்த அனுமதிச் சீட்டு வழங்கியதில் இருந்து துவங்கியது. பின்னர், இது மற்ற வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டது.

இந்திய சுதந்திரத்திற்குப்பின், 1950-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் சட்டத்தில் ’பிரிட்டிஷார்’ என்ற வார்த்தையை அகற்றி ‘இந்திய குடிமகன்’ என்று மாற்றப்பட்டு அருணாசல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த உட்கோட்டு அனுமதி முறை மணிப்பூர் மாநிலத்துக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இருதினங்களுக்கு முன்னர் அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இதுதொடர்பான அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.

இதைதொடர்ந்து, இந்தியாவின் பிறபகுதிகளில் இருந்து செல்லும் மக்கள் உட்கோட்டு அனுமதி பெற்றுச் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூர் மாநிலத்தையும் இணைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news